சத்திரம் சிதைந்தது! மாடடை மாளிகையானது!! - CHRISTMAS 2021
சத்திரம் சிதைந்தது! மாடடை மாளிகையானது!!
பெருந்தொற்று என்னும் இருளில், அமைதியற்ற நிலையில் அமைதியின் அரசராம், உலகின் பேரொளியாம் இயேசுவை கொண்டாடும்
நோக்கில் மானுட உலகு கிறிஸ்து பிறப்பு தினத்திற்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருமறையின் பழைய ஏற்பாட்டு காலம் தொடங்கி, பல காலகட்டங்களில் சமூக கட்டமைப்பு, ஆட்சி, அதிகாரம், மேலாதிக்கம் போன்றவற்றால் அடிமை
வாழ்வில் தவித்து வந்த மக்கள் அத்தகைய சூழலிலிருந்து தங்களை விடுவிக்கும் மேசியாவை
எதிர்பார்த்து காத்திருந்தனர். அதே நிலை இயேசு கிறிஸ்துவின்
காலத்திலும் தொடர்ந்தது. தங்களுக்குரிய மேசியா தோன்றுவார், தற்கால ஆட்சியாளர்களை அகற்றி, பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அதிகாரத்தை பிடிப்பார், ஆயுதமேந்திப் போராடுவார், அரண்மனையில் பிறப்பார் என்பன போன்ற
எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு அமைதிக்கான அரசரின் பிறப்பின் நிகழ்வே
அவர்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் தவறானது என்பதை சுட்டிக்காட்டும் வண்ணத்தில்
அமைந்தது. இதுவரை மக்கள் கண்ட ஆட்சிமாற்றம்
பணபலத்தையும், படைபலத்தையும் அடிப்படையாய்
கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை இயேசு என்னும் மேசியாவின்
வருகை ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்குரியதாய் இராமல் அனைத்துலகின் விடுதலையை
மையப்படுத்தி அமைந்திருந்தது. எனவே,
அவர் பிறப்பால் மானுட உலகில் ஏற்ப்படப்போகும் புது வாழ்விற்கான அடிப்படை மாற்றம்
சத்திரம் சிதைந்து, மாடடை மாளிகையானதிலிருந்து தொடங்குகிறது.
சத்திரம் சரித்திரத்தை இழந்தது:
கிரேக்கத்தில் “Kataluma”
என்கிற சொல் ‘சத்திரம்’ (Inn)
என்பதை குறிக்கிறது, அதன் பொருள் “இளைப்பாறும் இடம்” (A Place to Relax).
இயேசு கிறிஸ்து
பிறந்த காலகட்டம் நெருக்கடிகள் மிகுந்து காணப்பட்டது, அரசு ஆணையின்படி குடிமதிப்பு எழுதப்பட வேண்டிய கட்டாயத்தில்
மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். வழக்கத்திற்கு மாறான மக்களின் திடீர் பயணமும், மக்களின் அவசர நிலையும் சத்திரங்களில்
இடங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தியது. இன்றைய தங்கும் விடுதியை மனதில் நிறுத்தி
சிந்திக்கும்போது, சத்திரம் என்பது மனிதர்கள்
தங்குவதற்கான பல வசதிகளை கொண்டிருந்தது. பலவகை அலங்காரப் பொருள்கள், நறுமணத் திரவியங்கள், ஆடம்பரமும், வசதியுமான அமைப்போடு, பாதுகாப்பாளர் கண்காணிப்பின் கீழ் செயல்படும் இடமாய்
இருந்தது. வழிப்போக்கர்களின் பார்வையில்
படும்படி நகரத்தின் மையத்தில் அமையப் பெற்றிருந்தன சத்திரங்கள். பணபலம், அதிகார அரவணைப்பு, பகை, பொறாமை, விரோதம், வஞ்சகம், போட்டி நிறைந்த மனநிலை கொண்ட
மனிதர்கள் ஒன்றிணைந்த இடமாக அது காட்சி தந்தது. இப்படி சொல்ல காரணம், நிறைமாத கர்ப்பிணியை கண்டும் மனிதநேயத்தை வெளிப்படுத்தாத, மனச்சான்றுயற்ற மனிதர்கள் அங்கு நிறைந்திருந்தனர். வெளிப்புற தூய்மையுடன் சத்திரம் காட்சி
தந்தது, ஆனால் உள்ளான தூய்மை வாழ்வில்
குறை கொண்டிருந்தது.
இயற்கை ரம்மியத்துடன்
பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் அதற்கு இருந்தது, அதே சமயம் படைப்பாளராம்
மானுட மகனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை சத்திரத்திற்கு இல்லாதிருந்தது. சுற்றுபுறம் முழுமையும், விளக்கின் வெளிச்சத்தில் பிரகாசித்தது
ஆனால் அங்கு இருந்தவர்களிடம் உலகில் பிரகாசிக்க போகும் பேரொளியாம் கிறிஸ்துவை
ஏற்றுக் கொள்ளும் மனது இல்லை.
இத்தகைய சுயநல குணநலன்களால்
சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டிய அந்த சத்திரம் தன்னைத்தானே சிதைத்துக்
கொண்டது.
மாடடை மாளிகையானது:
சத்திரத்திற்கு முற்றிலும்
எதிர்மறையான தன்மையைக் கொண்டிருந்தது மாடடை. மற்றவர்களின் பார்வையில் படாதபடி
ஒதுங்கி அமைந்திருந்தது. பிறரை கவர்ந்திழுக்கும்
நறுமணமும், அலங்காரமும், ஆடம்பரமும் இதனிடம் இல்லாதிருந்தது. சத்திரத்தை போன்று மையத்தில் அல்ல கடை
நிலையில் அமையப் பெற்றிருந்தது.
வாசலில் நின்று மலர்கொத்து
தந்து, வரவேற்க அங்கு நபர்கள் இல்லை. சுற்றுபுறத்தை முழுமையாய் பிரகாசிபிக்கும்
ஒளி அங்கு இல்லை, முற்றிலும் இருள் மையம் கொண்டிருந்தது. அதேசமயம், உலகின் பாவ இருளை போக்க வந்த கிறிஸ்துவாம்
பேரொளியை ஏற்றுக்கொள்ளும் மனது அதற்கு இருந்தது. தூய்மையான காற்றோ, தாராள வசதியோ அங்கில்லை,
ஆனால் மனுக்குலத்திற்கு ஜீவ சுவாசத்தை தந்தவர் வசிக்க அங்கு இடம் இருந்தது. சமூகத்தால் கைவிடப்பட்டோர், அநாதைகள், ஆதரவற்றோர், துன்பத்தில் இருப்போர், நிலையற்று அலைந்து திரிந்தோரை தூய்மையான
உள்ளத்தால் அரவணைக்கும் பக்குவம் முன்னணைக்கு தாராளமாகவே இருந்தது. விலங்குகளின் மூச்சுக்காற்று பாலன் இயேசுவுக்கு
தாலாட்டு பாட ஆவல் கொண்டிருந்தன.
இத்தகைய தன்மைகளைக் கொண்டிருந்த
மாடடை குடில், மானுட மகனை வரவேற்க தன்னை எல்லா
நிலைகளிலும் ஆயத்தப்படுத்தி வைத்திருந்தது. வெளித்தோற்றத்திற்கு ஒளி மங்கி காட்சி தந்தாலும் பிறர்
வாழ்வில் ஒளி ஏற்றும் தியாக சிந்தனை மாடடைக்கு தாராளம் இருந்தது.
அர்த்தமுடைய கிறிஸ்து பிறப்பை
கொண்டாடுவோம் வாரீர்!!
இக்கால கிறிஸ்துபிறப்பு கொண்டாட்டங்கள் இயேசு கிறிஸ்துவின் மானுட வருகையின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இல்லாமல், வீண் ஆடம்பரத்தையும், அலங்காரங்களையும் மையப்படுத்தி அமையப் பெற்றிருக்கிறது. பல ஆயிரம் செலவு செய்து மின்விளக்கு அலங்காரங்கள், பல வடிவ குடில்கள், பட்டாசுகள், கேளிக்கைகள், பரிசுகள் என எளிமையை விட்டுவிட்டு பொருளாதார பெருக்கத்தை காட்டுவதாக மாறிவிட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம், ஆதிக்க சமூகத்தில் வாழ்விற்காக தவித்துக் கொண்டிருந்தவர்கள் வாழ்வு பெறவும், சமூக கட்டமைப்பின் அடிமைத்தன சங்கிலியில் சிக்கி தவித்தவர்கள் விடுதலை பெறுவதையே மையப்படுத்தி இருந்தது. இவ்வருட கிறிஸ்துபிறப்பு கொண்டாட்டங்கள் கிறிஸ்துவின் வருகையின் உண்மை சாரம்சத்தை வெளிப்படுத்துவதாய் அமையட்டும். ஆதரவற்ற நிலையில் இருப்போரை ஆதரிப்போம், சமூக கட்டமைப்பால் பாதிக்கப்பட்டோருடன் உடன் நிற்போம். இவ்வருட ஆடம்பர கொண்டாட்டத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்தும் முன்பு, “இயேசு பிறந்த தீவனத் தொட்டியும் அவருக்கு சொந்தமல்ல, அவர் மரித்தபோது அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் அவருக்கு சொந்தமானது அல்ல” என்பதை சிந்தையில் கொள்வோம். ஆகவே, எளிமையாய் தோன்றி, எளிமையுடன் வாழ்ந்து, எளியோருடன் இணைந்து பயணித்த கிறிஸ்துவின் தன்மையையும், சிந்தையையும் தரித்துக் கொள்வோம், அர்த்தமுடைய கிறிஸ்து பிறப்பை எதிர்கொள்வோம்! பிறர் வாழ்வில் ஒளியேற்றும் தீபங்களாகுவோம்!!
ஆ. ஜெனில் தாஸ்
Thoughtful content anna!Actions speak louder than words!
ReplyDeleteThank you for your valuable feedback
Delete