அனைவருக்கும் சமத்துவமும், நீதியும் - Equality and Justice to all
அனைவருக்கும்
சமத்துவமும், நீதியும்
குடியரசு தினம் (தியான வசனம்: சங்கீதம்: 97:2)
உலக வரலாற்றில் மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி,
மக்களாட்சி என்று பல்வேறு விதமான ஆட்சி முறைகள் காணப்படுகின்றன. இதில்
மக்களாட்சி முறையே சிறந்தது என்பதை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் Vincent
Churchill- “மானுடம்
கண்டுள்ள ஆட்சி முறைகளில் ஜனநாயக ஆட்சி முறையே குறைந்த தீமைகளை கொண்டுள்ளது” என்று குறிப்பிடுகிறார். 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள்
புதிய அரசியலமைப்பு சட்டங்களுடன் இந்தியா தன்னை ஒரு குடியரசு நாடாக
அறிவித்தது. இதனால், உலகிலேயே
மிகப்பெரிய ஜனநாயக நாடு, குடியாட்சி தத்துவத்தை
செயல்படுத்தும் நாடு என்ற பெருமை இந்திய நாட்டிற்கு கிடைத்தது.
ஏறத்தாழ 350 ஆண்டுகள் அந்நிய ஆட்சியில் கட்டுண்டு கிடந்த ஒரு நாடு
ஜனநாயகத்திற்கும், குடியாட்சி தத்துவத்திற்கும்
எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றால் அது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக, மக்களின்
ஆட்சி அமைப்பு. மறுபுறம், தேசத்தில் காணப்படும் வேலையில்லா திண்டாட்டம், தங்குவதற்கு வீடுகள் இல்லாது சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும் பலர் தங்கியிருக்கும் பரிதாபநிலை, சாலை விபத்துக்கள், நாளுக்கு நாள் பெருகிவரும் பயங்கரவாதம், தீவிரவாதம், அப்பாவி மக்களின் படுகொலைகள்
போன்றவை, இந்திய ஜனநாயகம் முழுமையான வளர்ச்சி காண வேண்டி உள்ளதோ, நமது
நாடு இன்னும் உண்மையான
விடுதலையை பெறவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதேசமயம் திருமறை காட்டும் ஜனநாயகம் என்பது அனைத்து
தரப்பு மக்களுக்கும் கிடைக்கப்பெறும் ஒரே தன்மை கொண்ட நீதியும், சமத்துவத்தையும் வலியுறுத்துவதாய் அமையப் பெற்றிருக்கிறது. அதை
இக்காலத்தில் சுதந்தரித்துக் கொள்ள இந்த குடியரசு தினத்தில் நாம் செய்ய
வேண்டியவைகள் என்ன? என்பதை
திருமறை வெளிச்சத்தில் தியானிப்போம்.
1.நீதியின்
ஒளி வீசச் செய்வோம்: (ஆமோஸ்: 5:18-27)
ஆமோஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் இஸ்ரவேல்
நாடு சீரும், சிறப்புமாய் இருந்தது. அதேசமயம், கடவுளைத் தேட
மறந்து,
திருவார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல், அதை எள்ளி நகையாடி, அநீதியின் உறைவிடமாய் மாறி இருந்தது இஸ்ரவேல் தேசமும், அதில் குடியுரிமை கொண்டிருந்த
மக்களின் வாழ்வும். அந்நிய தேசத்தில்
வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அடிமைத்தனத்தில் தவித்த தங்களை அரவணைத்த கடவுளின் அன்பை நினைவில் கொள்ளாமல், தங்கள் சொந்த தேசத்தின் ஏழை, எளியோரை அரவணைக்க முன்வராமல், அவர்களைத் துன்புறுத்தி, சுரண்டிய பின் துரத்தி விடுவதை
வாடிக்கையாக கொண்டிருந்தனர் இஸ்ரேலின் செல்வந்தர்களும், தலைவர்களும். நீதி முற்றிலும் மறுக்கப்பட்டு, தங்கள் சொந்த தேசத்தில் அடிமைகளாய் வாழும்
அவல நிலை இஸ்ரயேலின் ஏழை,
எளியோருக்கு ஏற்பட்டது.
கடவுளின் எச்சரிப்பின் வார்த்தைகளை சுமந்து
வந்த தீர்க்கதரிசிகளை கண்டு எரிச்சல் கொண்டனர், அவர்களை துன்புறுத்தவும்,
அவமதிக்கவும் சற்றும் தயங்கவில்லை அன்றைய இஸ்ரயேல் தேசம். எனவே தான் ஆமோஸ் 5:18-27
வரையிலான
திருவசனங்களில் மனமாற்றத்திற்கான அழைப்பு கடவுளால் தரப்படுகிறது.
இத்தகைய எச்சரிப்பும், கடிந்துக் கொள்ளுதலுக்கு
பிறகும், லஞ்சம், பொய் வழக்கு, கொலை, கொள்ளை, பழி, அராஜகம்,
பேராசை, வெறியாட்டம்
போன்ற அநீதியின் கூடாரத்தில் அடைக்கலம் கொண்டிருந்தனர்
இஸ்ரயேல் மக்கள். இதன்
விளைவாக கடவுளின் கடும் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது. எனவேதான் ஆமோஸ்:5:24 “நியாயம்
தண்ணீரைப்போலவும், நீதிவற்றாத நதியைப்போலவும் புரண்டு
வரக்கடவது” என்று கடவுளின் நீதியை குறித்து எடுத்துரைக்கிறது.
பாதிக்கப்பட்டோருடன் நின்று நீதிக்கான பாதையை உருவாக்கி அதில் வழி
நடப்போர் வழியாக தான் அடிமைத்தன சங்கிலிகள் உடைக்கப்படும்
என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் ஆமோஸ். “கர்த்தருடைய நாள்” (ஆமோஸ் 5:18) என்பது அசீரிய படையெடுப்பினால் உடனே
ஏற்படப்போகும் அழிவைக் குறிக்கிறது. “கடவுளின் நாள்” என்பது கடவுளைப் பற்றியோருக்கு மங்கலத் திருநாள், அதேசமயம் அவர் வார்த்தைகளை புறந்தள்ளியோருக்கு இருளின் நாள் என்னும் தெளிவை ஏற்படுத்துகிறார். இவை ஏழை, எளியோருக்கு ஆறுதலையும், விடுதலைக்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. தங்களை நீதியாளர்களாகவும்,
சமூக நல்லிணக்கவாதிகளாகவும் வேடமிட்டு கொண்டிருந்தவர்கள் அசீரியாவுக்கு அடிமைகளாக
கொண்டு செல்லப்பட்டனர். அநீதியின் முழு மரம் போல் இருந்தவர்கள் ஆணிவேரோடு பிடுங்கி
எறியப்பட்டு, அந்நிய மண்ணில் அநாதைகளாகவும், காய்ந்த சருகுகளாகவும் அழிந்து போனார்கள்.
அன்று அநீதியால் அழிந்துபோன இஸ்ரவேலர், இன்று நமக்கு எச்சரிப்பின் பாடம்.
நம்முடைய சுயலாபத்திற்காக சமூக அந்தஸ்து உள்ளவர்களை முகஸ்துதிக்காக வாழ்த்துவதையும்,
வால் பிடிப்பதையும் விட்டுவிட்டு, தேவையில் இருப்போர், உரிமைகள் மறுக்கப்படுவோர், ஏழை, எளியோருடன் நம்மை இணைத்துக் கொள்வோம். Martin
Luther King Jr, நீதியை குறித்துச் சொல்லும்போது “True
peace is not merely tension: it is the presence of justice” என்கிறார். ஏழைகளை தூக்கிப் பிடிப்போரை எதிரிகளாய் பாவிக்கும் நாடு அநீதியானது.
ஒடுக்கப்பட்டோருடன் உறவு பாராட்டுபவரை உதவாக்கரை என்று ஓரம் கட்டும் சமூகம் அக்கிரமம்
நிறைந்தது. பயன் கருதா பாசத்தோடு கடவுள்
மனுக்குலத்தை அரவணைப்பது போன்று, நாமும் ஏழை, எளியோரை அரவணைப்போம். அவர்களுக்கான நீதியை
வழங்குவோம், நீதியின் ஒளி வீசச் செய்து ஒளிமயமான எதிர்கால
உலகின் தீபங்களாகுவோம்.
2.சமத்துவம்
பாரில் பரவச் செய்வோம்: (அப்:10:34-43)
அப்போஸ்தலர்:10:34-43 வரையிலான திருமறைப் பகுதி
கொர்நேலியு இல்லத்தில் பேதுரு ஆற்றிய அருளுரையாகும். நற்செய்தி
என்னும் இயேசு கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கானவர் அல்ல, மாறாக இவ்வுலகின் அனைத்து மக்களுக்குமான “மீட்பர்” என்ற தெளிவை ஏற்படுத்துகிறது (அப்:10:34).
நேர்மையுடனும், நீதி, நியாயத்துடனும்
தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்பவர் கடவுளுக்கு ஏற்புடையவர் என்னும் தெளிவையும்
ஏற்படுத்துகிறார் பேதுரு. இயேசுவின் பணி, சிலுவைப் பாடுகள், மரணம்,
உயிர்த்தெழுதல், இயேசுவை குறித்த தீர்க்கதரிசன நிறைவேறுதல், அவரில் மானுடம் கொள்ளவேண்டிய நம்பிக்கையின் அவசியம், குறித்து எடுத்துரைக்கிறார். இதற்கான அடிப்படை
அவசியம் அன்றைய காலத்தில் வாழ்ந்து வந்த செல்வந்தர், ஏழைகள், யூத கிறிஸ்தவர்கள், பிற இனத்துக் கிறிஸ்தவர்கள்
இடையே நட்புறவு சிக்கல் இருந்து வந்தது. எனவே பிரிவினைகளை களைந்து, நல்லுறவை வளர்க்கும் அழைப்பை இயேசுவின் வாழ்வை மையமாகக் கொண்டு பேதுரு போதிக்கிறார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சம் என்னவென்றால், கொர்நேலியு பிற இனத்தவர், செல்வந்தர், படை அதிகாரி, பல தலைவர்களின் தயவை பெற்றிருந்தவர்.
அதேசமயம் பேதுரு மீனவராயிருந்து பின்னாளில் நற்செய்தி அறிவிக்க இயேசுவால்
அழைப்பை பெற்றவர். ஆனால் கிறிஸ்தவ வரலாற்றில் இவ்விருவரின்
சந்திப்பும், நட்பும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் மீட்பின் வழியை அறிய கொர்நேலியுவுக்கு பேதுரு
தேவைப்பட்டார், பிற இனத்தாரும் கடவுளின் திட்டத்தில் இடம்
பெற்றுள்ளனர் என உணர பேதுருவுக்கு கொர்நேலியு தேவைப்பட்டார். கடவுள் மானிட வாழ்வில் எப்படி செயல்படுகிறார் என உணர நாமும்
ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம். சமத்துவத்தை குறித்து James
Baldwin சொல்லும்போது, “Neither
love nor terror makes one blind: indifference makes one blind” என்று குறிப்பிடுகிறார். கடவுளின்
படைப்புகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. மற்றவற்றின்
துணை இன்றி எதுவும் இவ்வையகத்தில் இயங்குவது இல்லை என்ற புரிதலோடு மத, இன, மொழி, கலாச்சார
பாகுபாட்டால் நல்லுறவுகளை இழந்து விடாதபடி, அனைத்தும், அனைவரும் கடவுளின் சாயலை கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் கொண்டு இணைந்து, பகிர்ந்து வாழ்வோம். சமத்துவமும், நல்லிணக்கமும் மானிடப் பிரிவினருக்கு மட்டுமானது அன்று, அது கடவுளின் படைப்பான இயற்கைக்கும் பொருந்தும் என்ற தெளிவைப் பெற்று
கடவுளின் படைப்புகள் அனைத்துடனும் இன்புற்று வாழ்வோம்.
3.இறையாட்சி
நம்மில் மலரச் செய்வோம்: (மத்: 23:23-28)
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் இறையாட்சியை மையப்படுத்தியே
அமையப் பெற்றிருக்கின்றன. மலைப்
பிரசங்கத்தில் நேர்மை, நீதி, சமத்துவம், அன்பு போன்ற நற்பண்புகளால் இறையாட்சியை சுதந்தரித்துக் கொள்ள முடியும் என
இயேசு போதிக்கிறார். இயேசுவின் இத்தகைய போதனைகள் யூத
சமுதாயத்தில் செல்வாக்குடன் செயல்பட்டு வந்த பரிசேயருக்கும்,
வேதபாரகருக்கும், சுயநல சிந்தனை கொண்டிருந்த சில
தலைவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை. இவர்களே
இயேசுவின் போதனைகளை அதிகம் எதிர்த்தவர்கள். இவர்கள் தங்களின்
சுயநலம் கொண்ட போதனைகளால் மக்கள் மீது தங்கள் அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர். இயேசுவின் போதனைகள் இத்தகையோரின் முகத்திரைகளை அகற்றும் விதத்தில் அமையப்
பெற்றிருந்தது. இதன் ஒரு பகுதியை தான் மத்தேயு: 23:23-28 வரையிலான திருவசனங்கள்
எடுத்துரைக்கின்றன. இவர்கள் கடவுள் அருளும் மகிழ்ச்சி வாழ்விற்கு
என்று அழைக்கப்பட்டவர்கள், ஆனால் தங்கள் சுயநலம், வீண் பெருமைகளால் கேடுகளை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இறையாட்சியின் அடித்தளமான அன்பை மறந்து, தங்கள்
குறுகிய சிந்தனை மற்றும் சட்டங்களால் மக்களுக்கு அநீதி ஏற்படுத்தினர், தங்கள்
சுயநல பெருமைகளின் மீது கவனம் செலுத்தி, மக்கள் துன்புறும் நிலையை ஏற்படுத்தினார். இத்தகைய தீயசெயல்கள் கடவுளின் கடும் சினத்திற்கு காரணமாயிற்று.
அன்றைய சமூக, சமய தலைவர்களின் நிலைப்பாடு இப்படி இருக்க, இயேசுவின்
வாழ்வு சமூகத்தில் கடைநிலையில் விடுதலைக்காய் தவித்துக் கொண்டிருந்த மக்களை மையம்
கொண்டிருந்தது. அவருடைய அணுகுமுறை அடிமைத்தன வாழ்வு வாழ்ந்த மக்களில்
விடுதலையின் நம்பிக்கையை ஏற்படுத்தியது. பிறர் மீது அன்பு
செலுத்துவதால் மகிழ்ச்சியான வாழ்வு அமையுமென்ற உண்மையை எடுத்துக் கூறியது. Allan F Packer இறையாட்சி குறித்துச் சொல்லும்போது, “Seeking
the kingdom of God leads to joy and happiness” என்கிறார். இறையாட்சி என்பது நம்மில் அமையப் பெற்றிருக்கிறது, அது அன்றாட வாழ்வில் பிறரோடு எந்த நிலையில் நல்லுறவைப் பேணி வாழ்கிறோம் என்பதைப்
பொறுத்தது என்ற தெளிவை இயேசுவின் போதனைகளும், வாழ்வும் எடுத்துக்
கூறுகின்றன. இயேசுவின் வாழ்வு கைவிடப்பட்டோர், எளியோர், வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர், உரிமை
இழந்தோர், கைம்பெண்கள், சமூக கட்டமைப்பின் கடைநிலையில்
வாழ்ந்தவர்களை சார்ந்தே இருந்தது. இயேசுவைப் போன்று நம்முடைய
வாழ்வும் அமையும் பட்சத்தில் இறையாட்சி நம்மில் மலரும், நாமும்
பிறர் வாழ்வில் நறுமணம் வீச முடியும்.
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த போது
சுயநலமற்ற கரிசனையை வெளிப்படுத்தினார், அதன்
நிறைவே சிலுவைப் பாடுகள். இயேசுவின் தியாக வாழ்விற்கு சான்றாக இருக்கும் திருமறை
வெளிச்சத்தில் நடக்கும் நம்மால் நீதியின் ஒளி வீசட்டும்,
சமத்துவம் பாரில் பரவட்டும், இறையாட்சி நம்மில் மலரட்டும்.
ஆ. ஜெனில்
தாஸ்
Comments
Post a Comment