நான் கண்ட பறவை- சிறுவர் கட்டுரை

 நான் கண்ட பறவை


“வானில் மிதக்கும் கருமுகிலின்
            
வனப்பில் மயங்கி மகிழ்வுடனே                         
            
கானில் நின்று நீயாடும்
            
காட்சி கண்டு வியந்தேனே” 
என்று வண்ணத் தோகை விரித்து ஆடும் மயிலின் அழகில் மயங்கிப் பாடிய புலவர் பலர் உண்டு. கண்ணைக் கவரும் அவ்வண்ணப் பறவை தான் நான் கண்ட பறவை.

அழகு மயில்        

 இந்திய மயில்களின் இரண்டு வகை உண்டுஅவை பச்சை மற்றும் வெள்ளை மயில்கள். ஆண் மயிலுக்கு நீண்ட தோகையுடன், அழகிய கண்களும், தலையில் சிறு கொண்டையும் காணப்படும். கோழியினப் பறவையான மயில் நீண்ட கழுத்தைக் கொண்டது.  நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்களுடன் ஒவ்வொரு அசைவிற்கும் மயில் திரும்பும் அழகே அழகு தான்! கருமேகம் சூழ்ந்து விட்டால் தன் வண்ணத் தோகையை விரித்து ஆடும் மயிலின் இக்காட்சிக்கு மனதைப் பறி கொடுக்காதவர்கள் இவ்வையகத்தில் எவருமில்லை! ஆபத்தைக் கண்டால் அதிக ஒலி எழுப்பும் பறவையும் மயிலே ஆகும். இவ்வொலியை அகவல், ஆலல், ஏங்கல் என்கிறோம்.

    மயில் ஓர் அனைத்துண்ணி பறவை. தானியங்கள், புழு பூச்சிகள், அத்திப் பழங்கள், கிழங்குகள், தேன், கரையான்கள், தவளைகள், பாம்புகள் என இதன் உணவிற்கு நீண்ட பட்டியலே உண்டு. குறிஞ்சி நிலப் பறவையான மயில் காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் வாழும். மயில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழும் பறவை இனமாகும். குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் வாகனம் மயிலே!

மயிலின் சிறப்பு      

திருமறை காலத்தில்  சாலமோன் அரசருக்கு இந்திய மன்னர்கள் மயில் தோகையைப் பரிசளித்து இருக்கிறார்கள். திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் மயில் தோகை பற்றிய செய்திகள் உள்ளன. கி.பி 1963-இல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. கி.பி1972- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியச் சட்டப்படி மயிலை வேட்டையாடுவது தேசிய குற்றமாகும்.

முடிவுரை           

பண்டைய மன்னர்கள் தங்கள் படைக்கலன்களை அழகுபடுத்தி வைப்பதற்கு மயிற்பீலியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சமணர்களும் இந்துக்களும் மயிலையும் மயிற்பீலியையும் கடவுளாக மதித்துப் போற்றுகிறார்கள்.

“இயற்கை அன்னை இப் பெண்கட்கெலாம்                  

குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்

உனக்கோ குறையொன்றில்லாக் கலாப மயிலே

நிமிர்ந்து நிற்க நீள் கழுத்தளித்தாள்”.

-     என்கிறார் பாவேந்தன் பாரதிதாசன்.          

பல்வேறு சாதி, மதங்கள், இனக்குழுக்கள் வாழும் நம் இந்தியாவின் தேசியப் பறவை பல வண்ணங்கள் கொண்ட மயில் என்பது பொருத்தம் தானே? என கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். நன்றி வணக்கம்.‌


Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog.  😊

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)