சிலுவை மொழி 3- ஸ்திரீயே, அதோ, உன் மகன் ... சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் SERMON ON THE CROSS VERSE- 3

                                                                சிலுவை மொழி 3

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:26-27)



இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தையை இரண்டாகப் பிரிக்க முடியும்:

v 1 முதல் 3 பிறருக்கான வேண்டுதல்.

v 4 முதல் 7 தனக்கான வேண்டி கொள்ளுதல்.

இந்த மூன்றாம் திருவார்த்தை இயேசு கிறிஸ்து பிறருக்காக வேண்டிக் கொண்ட கடைசி வார்த்தை. இது பராமரிப்பின் வார்த்தை அல்லது உறவை புதுப்பிக்கும் வார்த்தை எனவும் சொல்லலாம். கொடும் சிலுவையிலே தன்னுடைய வாழ்வை வெறுமையாக்கி மானிட மீட்புக்காக தன்னைத் தானே ஒப்புக்கொடுத்த தேவ ஆட்டுக்குட்டி அந்த சிலுவையின் கோர காட்சியிலே தன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை ஒரு மகனாய் மிக கவனத்துடன் கவனித்துக் கொள்கிறார். எபேசியர்:6:3-இல் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது என்ற பிரதான கற்பனை இங்கு மிக அழுத்தம் பெறுகிறது. இந்தத் திருமொழி உணர்த்தும் நன்மைகளையும், இந்த திருவசனத்தில் மறைந்திருக்கும் உண்மைகளையும் நாம் சிந்தனை செய்வது இயேசுவின் சிலுவை பாடுகளை உணர்ந்து கொள்ள உதவியாய் அமையும். மேலும் ஏன் இந்த வார்த்தையை இயேசு சிலுவையிலே வெளிப்படுத்தினார்? என்பதையும் மனதில் காத்துக் கொள்வது சிறப்பு.

யார் இந்த மரியாள்?

கிரேக்க பாஷையிலே மரியாள் என்பதும் எபிரேய பாஷையிலே மிரியாம் என்பதும் ஒன்றுதான். புதிய ஏற்பாட்டில் ஐந்து நபர்கள் இந்த பெயரால் அழைக்கப்பட்டனர் அவர்களில் திருமறையின் மற்ற எல்லா பெண்களை காட்டிலும் இயேசுவின் தாய் மரியாள் ஆசீர்வதிக்கப்பட்டவர். திருமறையிலே கன்னி மரியாள் என்று சிறப்பு பெயரை பெற்றவரும் இவரே. மரியாள் என்றால் கண்ணீர் என்று அர்த்தம். இங்கும் சிலுவையின் அண்டையில் தன் பெயரின் பொருளுக்கு ஏற்ப மரியாள் கண்ணீரோடும், கலக்கத்தோடும், ஒரு வித ஏக்கத்துடனும் அழுது கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தாயாய் தன் மகனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்.

மேலும் மரியாதை குறித்து திருமறை கூறும் போது:

v     மரியாள் நாசரேத் ஊரை சார்ந்தவர்

v     யோயாக்கீம் அன்னாள் இவர் பெற்றோர்

v     யோசேப்பின் மனைவி

v     இயேசுவின் தாய் என்ன குறிப்பிடுகிறது.

யோசேப்பு மரியாள் குடும்ப சூழ்நிலையை பார்க்கும் போது இந்த தம்பதிகள் எளிமையாகவும், ஏழ்மையாகவும் தான் காட்சி தருகின்றனர். ஆனால் இவர்கள் யூத கோத்திரத்தில் தாவீது ராஜாவின் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பது நிச்சயம்.

யூதருக்கும் திருமணம் நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே நிச்சயதார்த்தம் நடக்கும். இப்படி மரியாளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சில காலத்திற்கு பின் காப்ரியேல் தூதன் மரியாளிடத்தில் வந்து, கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது  (லூக்கா:1:28-33) என்று தேவ தூதன் சொன்னபோது மரியாள், இதோ நான் ஆண்டவருக்கு அடிமை உமது வசனத்தின் படி எனக்கு ஆக கடவது என்று மறுமொழி அளித்தார். மரியாள் இப்படிச் சொன்னது லேசான காரியம் அல்ல இதன் மூலமாக எவ்வளவோ அவமானங்களையும், நிந்தைகளையும் சகிக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தும் கடவுளின் சுத்தத்திற்கு தன்னை மரியாள் முற்றிலுமாய் அர்ப்பணித்தார். இப்படி செய்தது மரியாளிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையை சுட்டிக் காட்டுகிறது. மரியாளின் இந்தகைய செயல்பாடு அவரைக் குறித்து இந்த சிறப்பு நேரத்திலேயே தியானிக்க காரணமாய் அமைகிறது. மரியாளின் இத்தகைய குணங்கள் இயேசு கிறிஸ்துவின் 7 பொன்மொழிகளில் ஒன்று மரியாளை மையம் கொண்ட திருமொழியாகவும் இடம்பெறச் செய்தது. இதன் வழியாக பெண்களின் சிறந்தவளாய் திருமறையிலே இடம் பெற செய்தது.

இயேசுவுக்கும் மரியாளுக்குமான உறவு எத்தகையது?

இயேசு கிறிஸ்து பிறந்த போது பல காரியங்கள் அதிசயமாய் நடந்தன. தூர தேசத்திலிருந்து சாஸ்திரிகள் அவரை பணிந்து கொள்ள வந்தனர், மந்தை மேய்ப்பர்கள் வாழ்த்தினர், வானில் அதிசயம் நிகழ்ந்தது, எலிசபெத் வாழ்த்தினார், அன்னாளின் ஆசியும், சிமியோனின் வாழ்த்தும் கிடைக்கப்பெற்றது. மரியாள் இந்த எல்லா மாற்றங்களையும் தன் மனதிலே காத்துக் கொண்டார். மரியாளுக்கு பிறந்த குழந்தை இயேசு, அதே சமயம் அவர் தேவ பாலகன். இருப்பினும் அவர்கள் நியாயப்பிரமாணம் கூறிய எல்லாவற்றின்படியும் இயேசுவுக்கு செய்யவும், அவரை வளர்க்கவும் மிகவும் கவனமாக இருந்தார்கள். பிறந்தது தேவசுதன் ஆயிற்றே எப்படி நடத்தலாம்? அல்லது எப்படி நடந்து கொள்ளலாம்? என கருதவில்லை. மாறாக பிள்ளை பிறந்த எட்டாம் நாளிலே மோசேயின் சட்டபடியும், யூதர்களின் வழக்கப்படியும் விருத்தசேதனம் செய்தனர். மோசே நியாயப்பிரமாணம் சொன்னபடி முதல் பேரான ஆண் பிள்ளையை கர்த்தருக்கு என்று ஒப்புக்கொடுத்து எருசலேம் தேவாலயம் வரை சென்று பலி செலுத்தி எல்லா கடமைகளையும் நிறைவேற்றினார்கள்.

தேவனுடைய இரட்சிப்பை காண காத்திருந்த சிமியோன் அன்னாள் போன்ற வயோதிபர் அவரைக் கண்டு வாழ்த்தி தேவனை மகிமைப்படுத்தினார்கள். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் (லூக்கா:2:35) என்னும் மறைபொருளும் மரியாளின் ஆழ்மனதில் அமைதி காத்துக்கொண்டிருந்தது. 12 வயதில் நியாயப்பிரமாணம் சொன்னபடி குடும்பமாய் தேவாலயம் சென்று தொழுது கொண்டனர். இப்படி எல்லா நிலைகளிலும் இயேசு நியாயப்பிரமாணம் சொல்லும் நியமம்படி வளர்க்கப்பட்டார். ஆனால் மூன்று முக்கிய இடத்திலே இயேசுவின் நிமித்தம் மரியாள் மிகவும் துக்கப்பட்டு இருக்கக்கூடும்.

முதலாவது எருசலேம் தேவாலயத்தில்

இயேசுவின் 12 வயதில் எருசலேமில் காணாமல் போன மகனை தேடி அவரை ஆலயத்தில் கண்டு “மகனே ஏன் இப்படி செய்தாய்? நானும் உன் தந்தையும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” (லூக்கா:2:48) என்று கேட்ட தாய் மரியாளிடம் இயேசு, நீங்கள் ஏன் என்னை தேடினீர்கள் என் பிதாவின் காரியத்தில் நான் இருக்க வேண்டியது என்று அறியீர்களா? என கேட்டார். இந்த வார்த்தை வேதனையோடு மகனை தேடி அலைந்த மரியாளுக்கு கூடுதல் வேதனையாக அமைந்திருக்க வேண்டும். இருப்பினும் மரியாள் இந்த வார்த்தைகளை தன் மனதில் காத்துக் கொண்டார்.

இரண்டாவதாக கானாவூர் கல்யாண வீடு

திராட்சை ரசம் குறைந்து போனபோது தாயார் மகனிடம் வந்து அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை என்றார்கள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார் (யோவான் 2:4) 12 வயதில் எருசலேம் ஆலயத்தில் வைத்து கூறிய வார்த்தையை விட மரியாளை இது மிகவும் காயப்படுத்தி இருக்க வேண்டும். ஆனாலும் மரியாள் இந்த வார்த்தைகளையும் தன் மனதில் காத்துக் கொண்டார். இருப்பினும் மரியாளின் இந்த செயல் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, முதலாம் அற்புதத்தை செய்ய தூண்டியது. இயேசு கிறிஸ்துவின் வல்ல அற்புத செயல்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் மரியாள் தான்.

மூன்றாவதாக கப்பர்நகூம் உபதேசம்

அதிகாரிகளும் பகைவர்களும் மகனை கொலை செய்ய ஆலோசிக்கிறார்கள் என்னும் செய்தியை அறிந்தபோது, இயேசுவுக்காக கவலைப்பட்டு அவரை அழைத்துச் செல்ல தாயாரும் சகோதரரும் வந்த போது ஜனங்கள் அவரைப் பார்த்து உமது தாயாரும் சகோதரரும் உம்மை தேடுகிறார்கள் என்றார்கள். அதற்கு இயேசு, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும் தேவனுடைய சித்தப்படி செய்கிறவனை எனக்கு தாயும் சகோதரனுமாய் இருக்கிறார்கள் என்றார். (மத்தேயு 12:48-49) என் தாயார் யார்? என்ற கேள்வி மரியாளுக்கு எப்படி இருந்திருக்கும் கலங்கிக் கொண்டிருந்த உள்ளம் இந்த கடின சொற்களால் உடைந்து போயிருக்குமே. வழக்கம் போலவே இந்த வார்த்தைகளையும் தன் மனதில் காத்துக் கொண்டார் மரியாள்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் தூதன் மரியாளிடத்தில் தேவ சித்தத்தை கூறியது முதல் இயேசுவின் இந்த சிலுவை காட்சி வரையிலும் இறை சித்தத்திற்கு எதிராக மரியாள் எந்த ஒரு பதிலும் கூறவில்லை. மாறாக எல்லா காரியங்களையும் மனதில் காத்துக் கொண்டதாக திருமறை கூறுகிறது. இதுவே சிலுவையின் வழியாக இந்த நல்உறவை மரியாள் பெற்றுக்கொள்ள காரணமாய் அமைந்தது.

மரியாள் மீது இயேசுவுக்கு இருந்த கரிசனை

பாவிகளாகிய நமக்காக மரியாள் தான் பெற்ற மகனை சிலுவையிலே தியாகம் செய்தார். இதற்கு பலனாக இயேசு தனக்குபின் மரியாளை கவனித்துக் கொள்ளும் படி சிறந்த மகனை ஏற்படுத்திக் கொடுத்தார். மரியாளின் முதல் குழந்தை இயேசு கிறிஸ்து அவருக்குப் பிறகு மோசே, யூதா, சிமியோன், யாக்கோபு என்னும் நான்கு குமாரரும், குமாரத்திகளும் பிறந்தார்கள் என்று திருமறையிலே பார்க்க முடிகிறது. இத்தனை மகன்களும், மகள்களும் இருந்தும் இயேசு தான் சிலுவையிலே மரிக்கும் தருவாயில் தன்னிடம் அன்பாய் இருந்த தமது சீஷனிடம், சீனை அதோ உன் தாயிடம் ஸ்திரீயே அதோ உன் மகன் என்று ஒரு பராமரிப்பின் ஒப்படைப்பை கொடுக்கிறார்.

தன் வாழ்விற்கு பிறகு மரியாளை கவனித்துக் கொள்ளும் சிறந்த நபர் தனக்கு அன்பாய் இருந்த சீன் என்று சொல்லுகிற ஆழமான நம்பிக்கை இயேசுவிடத்தில் இருந்தது. தன்னுடைய பிறப்பு முதல் இத்தருணம் வரையிலும் எல்லா கடினங்களையும் தன் இருதயத்தில் வைத்து தன் திருப்பணிகளில் தன்னோடு பயணித்த தன் தாயாரை வெறுமையாய் விடுகின்ற மனது இயேசுவுக்கு சிலுவையில் கடைசி நொடி பொழுதில் கூட இல்லாதிருந்தது. இதற்குக் காரணம் இயேசுவுக்கு மரியாள் மீது இருந்த கரிசனையே தவிர வேறு ஒன்றும் இல்லை. மாற்கு 3:31- மரியாள் இயேசுவுக்கு காத்திருந்தார் என்று பார்க்கிறோம். ஒன்றிலும் குறை உண்டாகாதபடி மரியாள் இயேசுவை வளர்த்திருந்தார்கள். எனவே இந்த புது உறவின் அடையாளமாக யோவானின் பராமரிப்பில் மரியாளை இயேசு ஒப்புக்கொடுத்தார். அப்போஸ்தலர்  1:14- ஆதிகால விசுவாச கூட்டத்தில் மரியாளும் ஒருவர் என்பதை தெளிவு படுத்துகிறது. தன் மகனின் ஊழிய பாதையிலே தொடர்ந்து தன்னை இணைத்துக் கொண்டார் மரியாள். தான் கிருபை பெற்றவள், பெண்களில் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை தன் வாழ்வின் செயலின் வழியாய் வெளிப்படுத்தினார். இந்த மூன்றாம் சிலுவை மொழி நமக்கு கற்று தருகிற பாடம் எந்தச் சூழலிலும் எக்காரணத்தினாலும் நமது பெற்றோரை தனிமையாக்கி விடக்கூடாது. பெற்றோரை கணம் செய்து நன்மதிப்போடு அவர்களை நடத்த வேண்டும். பிள்ளைகளாய் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை அதனதன் காலங்களில் செய்து நிறைவேற்ற வேண்டும். எனவேதான் பழமொழியாக சொல்லும்போது தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றனர். இயேசு தன் தாய் மீது கொண்டிருந்த பாசம், இன்று நமக்கு மிக சிறந்த பாடம்.

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting my JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊

 

Comments

  1. Precisely explained pastor. Timely blog post. May God Bless you with Enormous Knowledge and Wisdom while writing his words

    ReplyDelete
    Replies
    1. Thank You Ani for you encouraging words. All glory to be God.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)