Sermon on தியத்தீரா திருச்சபை THYATIRA CHURCH

 

தியத்தீரா திருச்சபை

                                                                                                                      (தி. பா : வெளி: 2:18-29)

வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சபைகளில் தியத்தீரா நான்காவது திருச்சபை. இது சிறிய திருச்சபை, குறுகிய முக்கியத்துவத்தை உடையது, ஆனால் நீண்ட கடிதத்தை பெற்றுக் கொண்டது. அதைதான் வெளி: 2:18-29 வரையிலான திருமுறை பகுதிகளில் பார்க்கிறோம். இக்கடிதத்தின் வழியாக கடவுளின் எச்சரிப்பும், மனமாற்றத்திற்கான அழைப்பும் கொடுக்கப்படுகிறது. இக்கடிதத்தின் மைய நோக்கம் என்ன? என்ன மாற்றத்தை கடவுள் இந்த சபையிடம் விரும்பினார்? இந்த எச்சரிப்பின் கடிதத்தை பெற இவர்கள் செய்த செயல்கள் தான் என்ன? என்பதைப் புரிந்துகொள்ள இந்நகரின் கட்டமைப்பை அறிந்துகொள்வது அடிப்படை அவசியமானது.

தியத்தீரா பட்டணம்:

இது சிறிய ஆசியாவில் ரோமப் பேரரசின் தலைநகராயிருந்த பெர்கமுகான நுழைவாயில். இது எபேசு, சிமிர்னா போன்று துறைமுகப் பட்டணம் அல்ல, பெர்கமு போன்று மலை தேசமும் அல்ல. மாறாக நீண்ட பள்ளத்தாக்கில் இப்பட்டணம் அமைந்திருந்தது. மத்தியதரைக் கடலிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்தாலும், பெர்கமு - சர்தை பட்டணங்களை இணைக்கும் அன்றைய வணிகத்திற்கான மிக முக்கியமான சாலையில் அமையப் பெற்றிருந்தது. பெரிய நகராய் இல்லாதிருந்தாலும், இது மிகச் செழிப்பான நகரம். அதேசமயம் அதிக வணிகர்கள் மட்டும் உற்பத்தி மையங்களை கொண்டிருந்த நகரம். இங்கு ஏராளமான வர்த்தக குழுக்கள் இருந்தன அவை ஆரம்பகால தொழிற்சங்கங்களுக்கு சமமானவை. எனவே தியத்தீரா என்பது தொழிற்சங்க நகரம் என்றே அழைக்கப்பட்டது. மற்ற சபைகளை போன்று இவர்களுக்கு மத, சமய துன்புறுத்தல் இல்லை. அதேசமயம் வர்த்தக குழுக்களால் துன்புறுத்தல் இருந்தது. இந்நகரில் யூதர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வாழ்ந்து வந்தனர். இந்த சிறு நகரம் தலைநகர் பெர்கமுவிற்கு நுழைவு வாயிலாக இருந்ததால், அதை தாக்கவரும் எதிரிகளின் தாக்குதலுக்கு அநேகமுறை ஆளாக்கப்பட்டு, பலமுறை மறுகட்டமைப்புக்கு உட்படுத்தப்பட்டது. எப்பொழுதும் படைகள் அணிவகுத்து வைக்க வேண்டிய அபாய நிலையில் இருந்து வந்தது இந்நகரம். இது கி.மு 190 முதல் ரோமா ஆக்கிரமிப்பு நகரமாக மாறியது. மூன்று நூற்றாண்டுகள் இது ரோமா ஆட்சியின் கீழ் இருந்தது. இக்காலகட்டத்தில் சிறிய நகரான இது பெரிய அளவில் வணிகத்தில் செழித்தது. இந்நகரில் guilds என்றழைக்கப்படும் ஒரே தொழில் செய்வோர் இணைந்து இருக்கும் வர்த்தகக் குழுக்களும், (இன்றைய தொழிற்சங்கம் போன்று) சமூக வாழ்வியலும் அதிகளவில் காணப்பட்டது. இன்று மேற்கு துருக்கியில் “Akhisar” என்னும் பெயரில் இந்நகரம் அறியப்படுகிறது. இன்றும் ஜவுளி வியாபாரம் தான் அங்கு பிரதான தொழில். இத்தகைய சிறப்பு மிக்க பட்டணத்தில் அமையப் பெற்றிருந்த தியத்தீரா சபையின் சிறப்புகளையும், எச்சரிக்கை பெற காரணங்களையும் இரு நிலைகளில் சிந்திப்போம்.

1.திருப்தியான வாழ்வை வாழ்ந்தவர்கள்:

இது வர்த்தக பட்டணமானதால் குயவர்கள், தோல் பதனிடுவோர், நெசவாளர்கள், துணி சாயமிடுவோர் திக அளவில் வாழ்ந்தனர். குறிப்பாக அங்கு ஆடைகளில் பயன்படுத்தப்பட்ட அரியவகை ஊதா சாயம் உலகப் புகழ் பெற்றதும், அதிக பண மதிப்பை கொண்டதுமாய் இருந்தது. பவுலாரின் நற்செய்தி பயணத்தின்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஐரோப்பா கண்டத்தின் முதல் கிறிஸ்தவராக மனமாற்றம் பெற்று, குடும்பமாக ஞானஸ்நானம் பெற்ற லீதியாளின் சொந்த ஊர் தியத்தீரா. இதைதான் அப்போஸ்தலர்: 16:14,15 விளக்குகிறது. இவள் ஒரு பெண்மணி அதேசமயம் தன் வியாபார நிமித்தம் பிலிப்பி பட்டணத்தில் தங்கியிருந்தார். அங்கு இருந்தபோதுதான் பவுலுடனான சந்திப்பும், மனமாற்றமும் ஏற்பட்டது. இந்த நிகழ்வு அன்று தியத்தீராவின் வணிக உலகில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வாய்ப்பையும், உரிமையையும், சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம் லீதியாள் தன் சொந்த நகரத்திலும், வியாபார நிமித்தம் தங்கியிருந்த இடத்திலும் நற்பெயர் பெற்றிருந்தார். எனவேதான் அப்போஸ்தலர் 16:15-யில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவள், இதற்கு முன் அதிக அளவில் அறிமுகமில்லாத  பவுலை தன் வீட்டிற்கு மனப்பூர்வமாய் அழைத்து திருச்சபை உருவாக காரணமாய் அமைய முடிந்தது. இவள் மூலம் நற்செய்தியாம் கிறிஸ்து தியத்தீரா நகரிலும் நிச்சயமாய் பறைசாற்றபட்டிருக்க வேண்டும். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இணங்க இக்கடிதத்தில் வெளி: 2:19 -யில் உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். என்று கிறிஸ்துவே அவர்களை குறித்து நல்சாட்சி சொல்வதை பார்க்க முடிகிறது.

பல்வகை வர்த்தகம், தொழில் போட்டிகள், ஆடம்பர வாழ்க்கை அனைத்தும் தங்களை சுற்றி இருந்தபோதிலும் கிறிஸ்துவின் பிரதான கட்டளையான அன்பு இங்கு அளவுக்கு அதிகம் இருந்தது. அன்பின் தன்மையை Amy Carmichael அம்மையார் சொல்லும்போது you can give without loving, but you cannot love without giving” என்கிறார். அன்போடு மட்டும் நின்று விடாமல் அதோடு கூடவே விசுவாசம், பொறுமை, ஊழியம், நற்கிரியை முதலியவை கடவுளே போற்றும் அளவிற்கு இந்த சபையில் மிகுதியாய் இருந்தது. பணம், செல்வம், அதிக நட்பு, புதிய மனிதர்களின் பழக்கவழக்கம் போன்றவற்றில் மட்டுமல்ல, நற்செயல்கள் மற்றும் கடவுளின் கட்டளைகளை பின்பற்றி நடப்பதிலும் இவர்கள் திருப்தியான வாழ்வை வாழ்ந்தார்கள். இன்றைய உலகின் மனிதர்கள் சிறு முன்னேற்றம் ஏற்பட்டு, கையிலும், பையிலும் பணம் பெருகி விட்டால் போதும், பெற்றவர்கள் கூட பிள்ளைகளால் அனாதைகளாகப்படும் அவலநிலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பதற்கு சான்றாக இன்று பணத்தின் பின்னால் ஓடி, நல்ல குணத்தையும், மனிதத்தையும் மனிதர்களில் அநேகர் இழந்து நிற்கின்றனர். இத்தகையோருக்கு இந்த தியத்தீரா சபை நல்ல எடுத்துக்காட்டு. அவர்கள் தங்கள் வாழ்வின் திருப்தியை சம்பாதிப்பதிலும், வணிகத்திலும் மட்டுமல்ல கடவுளின் திட்டத்தையும், கட்டளைகளையும் நிறைவேற்றுவதிலும் வெளிப்படுத்தினர்.

 

2. திருந்தி வாழ அழைப்பை பெற்றவர்கள்:

இத்தகைய சிறப்புமிக்க வாழ்வை கொண்டிருந்த சபைக்கு மனமாறுதலுக்கான அழைப்பு கொடுக்கப்படுகிறது. அவர்களின் நற்செயல்களை புகழ்ந்த கிறிஸ்து, அவர்களின் தீச்செயலை கடுமையாக கண்டிக்கிறார். வெளி: 2:20 ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். என்றவர், இங்கு யேசபேலை உருவகமாக பயன்படுத்துகிறார். இந்த யேசபேல் வழியாகத்தான் பாகால் வழிபாடு இஸ்ரவேலுக்குள் வந்தது. இவள் ஏத்பாகால் என்கிற சீதோனிய ராஜாவின் மகள். இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப் இவளை மணமுடித்ததின் மூலம் இஸ்ரவேல் கடவுளை விட்டு விலகி, பொல்லாத செயல்களை நடப்பித்து, அனேக தீர்க்கதரிசிகளை கொலை செய்து கடவுளின் கடும் கோபத்துக்கு ஆளானது. இவை அனைத்திற்கும் காரணம் யேசபேல். இவளை தியத்தீரா சபைக்கு உருவகப்படுத்துகிறார். இதற்கு காரணம் அதைப் போன்ற செயல்கள் இங்கும் இருந்திருக்கவேண்டும்! ஆம் இருந்தது!!

இது வணிக நகரமானதால் பல்வேறு வகை வணிகம் செய்வோர் கூடி வாழ்ந்தனர். ஒவ்வொரு தொழில் செய்வோர் அவரவர் தொழில் சார்ந்த வணிக குழுக்களில் இடம்பெற்றிருந்தனர். அவரவர் தொழிலுக்கு ஏற்ப கடவுள்களும் அவர்களுக்கு இருந்தன. அந்த வணிகர் குழுக்களில் கிறிஸ்தவர்களும் இடம்பெற்றிருந்தனர். வணிகம் சார்ந்து இது தவிர்க்க முடியாதது. அதேசமயம் இவர்கள் செய்த தவறு என்னவெனில் வணிக குழுக்கள் தங்கள் தொழிலுக்காக அந்த கடவுள்களுக்கு ஆராதனை செய்வதை, இவர்களும் பின்பற்றினர். அந்த விக்ரகங்களுக்கு பலியாக படைக்கப்படும் உணவுகளை இவர்களும் புசித்தார்கள். இதை தான் இங்கு விபச்சாரத்திற்கு ஒப்பிட்டு கிறிஸ்து எச்சரிக்கிறார். காரணம் இவர்கள் கிறிஸ்துவுக்கும், அதே சமயம் பிற கடவுள்களுக்கும் சேவை செய்தார்கள். விக்ரக விருந்துக்கு சென்று விட்டு, பின்னர் கர்த்தரின் பந்திக்கும் வந்தனர். இது கடவுளின் கடும் கோபத்திற்கு காரணமாய் அமைந்தது. மறுபுறம் இது தொழில் நகரமானதால் பல்வேறு வாழ்க்கை முறை, கலாச்சாரம் கொண்ட வணிகர்கள், வியாபாரிகள் இந்நகருக்கு வந்து சென்றனர். எனவே இங்கு வேசிதனங்களும் அதிகம் காணப்பட்டது, குறி கேட்கும் மேடையும், குறி கேட்பதும் வழக்கமாக இருந்தது.

இவைகளில் இருந்து விடுபட்டு திருந்தி வாழ வேண்டும், இல்லையேல் கடவுளின் கடும் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்ற எச்சரிப்பின் தொணியை இக்கடிதத்தில் வழி கிறிஸ்து கொடுக்கிறார். வெளி 2:23,27 ஆகிய வசனங்களில் மிக கடினமாக கடிந்து கொள்கிறார். இந்த எச்சரிப்பு இஸ்ரவேலின் எகிப்திய அடிமைத்தனத்தின் போது எகிப்தியர்கள் சந்தித்த தலைப்பிள்ளை சங்காரத்தை நிச்சயம் அவர்களுக்கு நினைப்பூட்டியிருக்க வேண்டும். இங்கு கடிந்து பேசும் கிறிஸ்து வெளி 2:26-யில் ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்  என்று முடிவுபரியந்தம் அவர்கள் நிலைத்து நிற்க அறிவுறுத்துகிறார். அப்படி நிலைத்து நின்றால் விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்(வெளி:2:28) என்கிறார். இந்த விடிவெள்ளி யாரை? எதை? குறிக்கிறது என்பதை வெளி: 22:16 விவரிக்கிறது நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். அந்த விடிவெள்ளி கிறிஸ்துவே”. தன்னையே தரும் தியாக நிலையை தான் இந்த எச்சரிப்பு கடிதத்தின் நிறைவில் கிறிஸ்து தருகிறார். இது உலகின் மீது அவர் கொண்டிருந்த நிகரில்லா அன்பையும், தாய் உள்ளத்தையும், இரக்க குணத்தையுமே காட்டுகிறது. சிலுவையில் தன்னையே தியாகம் செய்தது மானிட வாழ்வில் விடியலை கொண்டு வரவே. அந்த வாய்ப்பு தியத்தீரா திருச்சபைக்கும் கொடுக்கப்பட்டது. இன்று நமக்கும் தரப்படுகிறது, எனவே அதை நமதாக்கிக்கொள்ள நம்மையே அவருக்கென்று தத்தம் செய்து முடிவு பரியந்தம் நிலையில்லா இவ்வுலகில் கிறிஸ்துவுக்காய் நிலைத்து நிற்போம்.

 

. ஜெனில் தாஸ்

Thank you for visiting my blog page. Feel free to give your comments. Don't forget to follow my blog.😊


Comments

  1. You have brought out lot of historical background, but I couldn't see anything contextual.
    I appreciate your good effort move on dear boy. I salute you.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much for your valuable comments brother. Sure I will improve this article by including present contextual. Thanks again for your good suggestion. Have a good evening Anna.

      Delete
  2. Congrats its a good effort.. keep on writing...

    ReplyDelete
    Replies
    1. Thank you encouraging words brother. I will definitely give my best effort.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)