ELOCUTION 2024 JUNIOR- தலீத்தாகூமி (மாற்கு 5:41)

 தலீத்தாகூமி (மாற்கு 5:41)

ஆபத்தில் ஆதரவாய் இருக்கிற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் பேச்சின் ஆழமரிந்து நல்ல தீர்ப்பு வழங்க வீற்றிருக்கும் நடுவர்களையும் என்னை போன்ற போட்டியாளர்களையும் வாழ்த்தி சபையோருக்கும் அவையோருக்கும் வணக்கம் சொல்லி, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள தலீத்தாகூமி என்னும் தலைப்பில் மாற்கு 5:41-யை ஆதாரமாகக் கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச விரும்புகிறேன்.

மாற்கு 5:35 முதல் 41 வரையிலான திருமறைப்பகுதியில் யவீரு என்கிற ஜெபஆலய தலைவனின் 12 வயது மகள் உயிர்பெற்ற நிகழ்வின் போது இயேசு கிறிஸ்து பயன்படுத்திய வார்த்தை தான் தலீத்தாகூமி என்பதாகும். இதற்கு சிறு பெண்னை எழுந்திரு என்பது அர்த்தம். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்தபோது செய்து நிறைவேற்றிய அற்புதங்களில் இதுவும் ஒன்று. இந்த நிகழ்வினை மத்தேயு நற்செய்தி ஆசிரியரும் பதிவு செய்திருக்கிறார். இந்த அற்புதத்திற்கு மிக முக்கியமான காரணமாக அமைவது ஒரு மகளை பெற்று வளர்த்திய தன்னிகரில்லா ஒரு தகப்பனின் விசுவாச போராட்டம். மரித்துப்போன தனது மகளை இயேசுவால் உயிரோடு மீண்டும் தன்னிடத்தில் தர முடியும் என்றவரிடத்தில் மரணமே ஒருகணம் மரணித்துப் போனது. ஆம் இத்தகைய விசுவாச வாழ்வை கொண்டிருந்த யவீருவனிடத்தில் மாற்கு 5:35-படி ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என சிலர் வந்து இப்படி கூற தன் விசுவாச ஜீவியத்திற்கு தடையாய் வந்தவர்களையும் மீறி இயேசுவின் பாதமே கதி என விழுந்தார் யவீரு என்ற பெயர் கொண்ட இந்த தந்தை. திருமறைக்கூற்றின்படி தாயின் கருவில் உருவாகும் முன்பே பெயர் சொல்லி அழைத்தவரும், தாய் உள்ளம் கொண்டவருமான இயேசுவால் தன் மனநிலையை அறிந்து உதவ முடியும் என நெஞ்சம் நிறைந்த சோகம் இருந்த போதிலும் இயேசுவை நம்பி நாடி ஓடி வந்தார். தற்கால உலகின் விசுவாச மாதிரிக்கு இந்த தகப்பனே நல்ல உதாரணம். அவரது விசுவாசத்திற்கு விசனமின்றி கொடுக்கப்பட்ட பதில் தான் மாற்கு 5:39-இல் பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்கிற இயேசுவின் பதில். திருமறை வரலாற்றை புரட்டும்போது கடவுள் மட்டுமே தஞ்சம் என நம்பி வந்தோர் வெறுமையாய் திரும்பி போனதில்லை, கண்ணீர் கடலில் தத்தளித்தவர்களும் கூட கரை காணாமல் சென்றதில்லை இதுவே விசுவாசம் வாழ்வதற்கான கடவுளின் மாபெரும் பரிசு.

ஆனால் தற்கால உலகின் அறிவியல் வளர்ச்சியில் தழைக்கும் உலகம் நாளைய உலகம் AI (Artificial Intelligence) கையில் என்கிறது. ஆனால் சில வருடத்திற்கு முன் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்னும் பெரும்தொற்றைக் கூட சமாளிக்க முடியாமல் கடவுளே தஞ்சமென அறைகளில் அடைந்திருந்தது இந்த முழு உலகமும். என்னதான் மனிதன் அறிவியலிலும், வணிகத்திலும், மருத்துவத்திலும், விஞ்ஞானத்திலும் வானம் தொடும் உயரம் உயர்ந்து நின்றாலும் கடவுள் துணை இன்றி அணுகூட அசையாது என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு சான்றாய் அமைந்திருப்பது தான் யவீருவின் வீட்டு நிகழ்வு உணர்த்தும் வாழ்க்கை பாடம். எனவே நம்முடைய வாழ்வும் வளமும் கையை நீட்டி எழுந்திரு என சொன்ன ஆண்டவரின் கரத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து கிறிஸ்துவின் மீதான விசுவாச வாழ்வில் வளர்வோம் உயர்வோம் எனக்கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.

A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊

Comments

  1. Good Effort dear Pastor
    Many thanks for using your talents for the glory of God. Keep it up

    ReplyDelete
    Replies
    1. THANK YOU SO MUCH FOR YOUR KIND ENCOURAGEMENT. GOD BLESS YOU. STAY BLESSED

      Delete

Post a Comment

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION 2024 INFANT- எரிந்து சுடர்விடும் விளக்கு (யோவான் 5:35)

ELOCUTION 2024 PRIMARY- வஞ்சகமற்ற வார்த்தையாகிய பால் (1பேதுரு 2:3)