ELOCUTION 2024 SENIOR- முதன்மையான மூலைக்கல் (1பேதுரு 2:7)
முதன்மையான
மூலைக்கல் (1பேதுரு
2:7)

கிறிஸ்தவ
ஜீவியத்தின் அடித்தளமாம் இறைமைந்தன் இயேசு
கிறிஸ்துவின் இனிய நல்நாமத்தில் நடுநிலை தவறாது நீதி வழங்க வீற்றிருக்கும்
நடுவர்களுக்கும் என்னைப் போன்ற போட்டியாளர்களுக்கும் அவையோருக்கும் சபையோருக்கும்
என் அன்பின் நல்வாழ்த்துக்கள். எனக்கு
இங்கு பேசும்படியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு முதன்மையான மூலைக்கல்
என்பதாகும். இதற்கு ஆதாரமான திருமறைப்பகுதி
1 பேதுரு 2:7 இதனை அடிப்படையாகக் கொண்டு என்
சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பேச விளைகிறேன்.
தூய
பேதுரு எழுதிய இந்த முதலாவது நிருபம்
சிறிய ஆசியாவை சார்ந்த
கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்டது. இந்தப் பகுதிகளில் யூத
கிறிஸ்தவர்களும் புற இனத்து கிறிஸ்தவர்களும் அதிக
எண்ணிக்கைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களில்
பெரும்பாலானோர் புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், அதே
சமயம் இவர்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் காணப்பட்டனர். எனவே
பேதுரு இத்தகையோரை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிருபத்தை எழுதினார்.
இந்நிருபத்தில் கிறிஸ்தவ வாழ்வின் கடமைகள், உண்மை வாழ்வு, சகோதர அன்பு ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன. தளர்ந்து போன நம்பிக்கையை மீண்டும் கட்டி
எழுப்புவதே இந்நிருபத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
1 பேதுரு
2-ஆம்
அதிகாரத்தில் புதிதாக மனம் மாறி வந்த
கிறிஸ்தவர்களுக்கு எபிரேயர் 4:12-இல் தேவனுடைய
வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்
பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும்
பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும்
வகையறுக்கிறதாயும் இருக்கிறது என சொல்லப்படுவதைப் போன்று
கடவுளின் வார்த்தை உயிர் உள்ளது அது கடவுளுக்கு உகந்த செயல்களைச் செய்ய நமக்கு
ஊட்டம் அளிக்கிறது என்னும் தெளிவினை ஏற்படுத்துகிறார் பேதுரு. இந்த நிருபத்தில் “மூலைக்கல்” என்னும் வார்த்தை அதிகம் இடம் பெறுகின்றன. இந்த மூலைக்கல் இயேசுவை குறிக்கிறது. அவர்
ஒதுக்கப்பட்டார், அநேகரால் நிராகரிக்கப்பட்டார் என்பதை திருமறை
வாயிலாக காண முடிகிறது. இத்தகைய நிராகரிப்பு நிலையிலிருந்த
இயேசுவை உலகை மீட்கும் மேசியாவாக கடவுள் தெரிந்துக் கொண்டார். அந்த இயேசுவை பேதுரு புதியதாக மனம் மாறியவர்களுக்கு 1 பேதுரு 2:4-இல் கர்த்தர் இயேசு ஜீவனுள்ள
“தலைக் கல்லாக” இருக்கிறார். உலக மக்களால் ஒதுக்கப்பட்ட கல்லாக அவர் இருந்தார்.
ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த கல் அவர் தான். தேவனிடம் அவர் விலை மதிப்புள்ளவராக
இருக்கிறார். எனவே அவரிடம் வாருங்கள் என்பதன் மூலம் இயேசுவை இவ்வுலகில் மாதிரியாக
காண்பிக்கிறார். இது அடிமை வாழ்விலும்,
ஒடுக்குதலிலும் தவித்து வந்த மக்களுக்கு மன ஊக்கத்தையும் எதிர்கால நம்பிக்கையையும்
ஏற்படுத்தியது.
பழைய
ஏற்பாட்டு வரலாற்றில் இஸ்ரயேல் மக்களும் இதேபோன்று பலரால் எதிர்க்கப்பட்டும், வெறுத்து
ஒதுக்கப்பட்டவர்களாய் இருந்தனர். இருப்பினும் அவர்களை கடவுள்
தெரிந்தெடுத்து என் ஜனம் என்னும் அங்கீகாரத்தை வழங்கினார். அதேபோன்று
யூதர்களாலும், ரோம ஆட்சியாளர்களாலும் வெறுத்து ஒடுக்கப்பட்ட
மக்களாய் காணப்பட்ட கிறிஸ்தவர்களும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களே என்னும்
நம்பிக்கையினை பேதுரு தனது நிரூபத்தின் வழியாக சமூக சமய கட்டமைப்பின் கடைநிலையில்
தவித்த மக்களுக்கு ஏற்படுத்துகிறார்.
ஒதுக்கப்பட்ட
கிறிஸ்து ஒருங்கிணைந்த திருச்சபைக்கு வித்திட்டார். சங்கீதம் 118:22 வீடுகட்டுகிறவர்கள்
ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என சொல்வது போன்று தற்கால திருச்சபையின்
மூலைக்கல்லாய் கிறிஸ்து விளங்குகிறார். தற்காலச் சூழலில்
சமூக சமய கட்டமைப்பின் ஏற்றத்தாழ்வினாலும், அதிகார ஆதிக்கத்தினாலும்
தவிக்கும் மக்களுக்கு இந்நிருபம் நம்பிக்கை ஊட்டுவதாய் அமைகிறது. சமூக ஒடுக்குதலில் தவிக்கும் நாமும் ஒருங்கிணைந்த வாழ்வை பெற கிறிஸ்து
அருள்புரிவார் என்னும் நம்பிக்கையில் கிறிஸ்துவின் மீதுள்ள பற்றுறுதியில்
நிலைத்திருப்போம். தற்காலச் சூழலில் அடிமைத்தன வாழ்வில்
தவிக்கும் மக்களோடு நம்மை அடையாளப்படுத்தி அவர்களின் விடுதலை வாழ்வுக்காய் குரல்
கொடுப்போம் என கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Remember to follow my blog. 😊
Thank you very much
ReplyDeleteWelcome
Delete