திருமுழுக்கு or ஞானஸ்நானம்- Christian Baptism

 திருமுழுக்கு or ஞானஸ்நானம் (Baptism)

ஞானஸ்நானம் இயேசுவின் கட்டளை:

உலக மீட்பர் இயேசு, தான் எடுத்துக்கொள்ளப்படும் முன் சீடர்களிடம், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம், கொடுங்கள் என்று கட்டளையிட்டார் (மத். 28:18,19).

சொல்பொருள்

‘Bapto’ என்னும் கிரேக்க அடிச்சொல்லிருந்து எழும் வார்த்தைகள் தான் பாப்திஸ்மா, பேப்டைன், பேப்டிசின். இவைகள் திருமுழுக்கு என்னும் சொல்லிற்குரிய கிரேக்கச் சொற்கள். பாப்தோ (Bapto) என்னும் அடி சொல்லுக்கு முழ்குதல் ( 2 இராஜா.5:14), கழுவுதல் (மாற்கு 7:4), தோய்த்தல் (திருவிவிலியம்) (சங்கீதம் 68:22), சூழ்தல், சுத்தம் செய்தல் போன்ற பல பொருள்கள் உள்ளன. திருமுழுக்கு தூய ஆவியரின் நிறைவை பெறுகின்ற நிகழ்வு, புது வாழ்வுக்கான அடையாளம்.

Background of Baptism

ஞானஸ்நானம்\திருமுழுக்கு என்பது யூதமத பின்ணணியத்திலிருந்து எழுந்தது. யூத ஞானஸ்நானம், கிறிஸ்தவ ஞானஸ்நானத்தின் வேர். Bapto’ என்னும் கிரேக்க அடிச்சொல்லின் பொருட்களான மூழ்குதல், தெளித்தல் போன்றவற்றால்தண்ணீர்முக்கியத்துவம் பெறுகிறது. தண்ணீர் இல்லாத பாலைவனங்களில் மணலால் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது. இஸ்ரவேலர் எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் விடுதலைப் பயணத்தின் வழியாக திருமுழுக்கைத் தொடர்புப்படுத்துகிறார். (1கொரி: 10:2)

அதுபோன்று யூதரல்லாத பிறமதங்களிலும் (Pagan religion) இந்தச் சுத்திகரிப்பு என்ற ஞானஸ்நானம் இருந்தது என்பதை அறிவது அவசியம். எனவே, மத நம்பிக்கையற்ற மக்களிடமிருந்து, தண்ணீரால் சுத்திகரிக்கும் சடங்கை யூதமதம் புதுப் பொருளோடு பின்பற்றியது. பின் யூத மதமும் இதனை சடங்காகப் பின்பற்றியது.

புராதீன சமயம் (Primitive Religion) புராதன பாலஸ்தீன நாட்டில் தண்ணீரினால் சுத்திகரிக்கும் சடங்கு Tablet of Maklu-இல் காணப்படுகிறது. எகிப்திலும் புராதன இனம் பிள்ளை பிறந்தவுடன் முதல் நீராட்டு குழந்தையைத் தூய்மையாக்கும் என நம்பினர், இதனை சிறப்பாக நடத்துவர். மேலும் எகிப்தில் இறந்த ஒருவரின் சடலத்தின் மேல் ஓடும் நைல் ஆற்றுநீர், நிலையான வாழ்வு கிடைக்கத் தெளிப்பர். இந்தச் சடங்கு தொடக்ககால கிறிஸ்தவர்களிடத்தில் காணப்பட்டது என்பதை 1கொரி:15:29-ல் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றனர் என வாசிக்கிறோம். இப்பழக்கம் எகிப்தில் இறந்தவர்கள் மேல் சுத்திகரிப்புக்காக தண்ணீர் தெளித்த பழக்கமாகலாம் எனக் கருதுகின்றனர். LDS Church- Latter Day Saint Movement Church இன்றளவும் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.

In some cult in Cybele பசுவின் இரத்தத்தினால் தங்களை பதினொரு மாதத்திற்கு ஒருமுறைசுத்தம் செய்வர். (எண். 19:2-10) சுத்திகரிப்புக்காகக் கழுவும் இச்சடங்கு பின் இறைவழிபாட்டில் தகுதியுடையதாகிறது. உபாகமம் 23:10,11-ல் அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால் பாளையத்திற்கு வெளியே போய் ... சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தும், என சொல்லப்பட்டிருக்கிறது. யூதர்கள் இதனைப் பின்பற்றி, யோவான் ஸ்நாபகனால் புது உயிர்கொடுக்கப்பட்டு, பின் கிறிஸ்தவமும் பின்பற்றியது.

ஞானஸ்நானங்கள்:

1. யூத ஞானஸ்நானம் (Jewish Baptism)- Ceremonial Purifications

யூதர்கள் அனுதின சுத்திகரிப்பை முக்கியமாகக் கொண்டு முறையாகச் செய்து வந்தனர், இது தினமும் செய்கிற ஆசாரம். ஆலயத் தொழுகைக்கும், பலிபீடத்தில் செல்லும் போதும் தங்களைத் தண்ணீரால் சுத்திகரித்துக் கொள்வர், அதாவது கை, கால்களைக் கழுவுவர். அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்துக்குள் செல்லும் போது.. நீங்கள் சாகாதபடிக்கு தங்களைக் கழுவக்கடவர்கள்… இது . நித்திய கட்டளையாகும். (யாத். 30:19,20,21). இச்சடங்கை கடவுள் “நித்திய” கட்டளையாகக் கொடுக்கிறார். இந்தச் சுத்திகரிப்புக்கு கை, கால் மாத்திரம் தண்ணீரால் கழுவப்படவேண்டும். இந்த யூத ஞானஸ்நானம் ஒருமுறை எடுப்பது அல்ல; தினந்தோறும் சுத்திகரிப்புக்காகச் செயல்படுத்தப்படும் ஒரு புனித நிகழ்வு. தினமும் சாப்பிடும் முன்பும், விருந்து வீட்டிற்குள் புகுமுன்பும், ஆலயத்திற்கு போகும் முன்பும் நடக்கும் அனுதின நிகழ்வு.

மாற்கு:7:4-ல் கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். மாற்கு:7:3-ல் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைத் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள்.” லூக்கா 11:38-ஐ படிக்கும்போது, அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான். இதில் ஆசார முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

இப்படிப்பட்ட சடங்குகளை அனுசரிக்காவிட்டால் சாவு (பழைய ஏற்பாடு) என்பதையும் எபிரேய ஆக்கியோன் நிராகரிக்கிறார். எபிரேயர் 9:10-ல் பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல எனத் தெளிவாக்குகிறார். பலவித ஸ்நானங்கள்’’ என்ற தொடர், பலவித ஞானஸ்நானங்கள் இருந்தன என்பது வெள்ளிடைமலை.

2. விருத்தசேதனம் (Circumcision)

விருத்தசேதனம் ஒரு யூத சடங்கு (ஆதி 17:7-10). ஈசாக்குக்கு எட்டாம் நாளில் (ஆதி 21:4), யோவானுக்கும் எட்டாம் நாளில் (லூக்கா 1:59), இயேசு கிறிஸ்துவுக்கும் (லூக்கா 2:21)  இந்த யூத சடங்கு நிறைவேற்றப்பட்டது, இந்த  விருத்தசேதனத்தின் தொடர்ச்சிதான் ஞானஸ்நானம். கொலோ 2:11- நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். இங்கு விருத்தசேதனம் சடங்கு முறை மாற்றம் பெறுகிறது. இதிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் திருமுழுக்கு ஒவ்வொறு முறையில் தரப்பட்டிருக்கிறது என்கிற புரிதல் ஏற்படுத்தப்படுகிறது.

3. புறஜாதியார் ஞானஸ்நானம் (Proselyte Baptism)

அன்று யூத மதம் ஆற்றல் மிகுந்ததும், அனைத்து அதிகாரங்களைக் கொண்டதும், அறிவுள்ள மற்றும் உயர்ந்த சமூகமாக கருதப்பட்டிருந்தது. புறஜாதியார் இம்மதத்தில் சேர ஆசையாயிருந்தனர். எனவே, புறஜாதியிலுள்ள அனேகர் யூதச் சமயத்தில் சேர்ந்தனர். புற இனத்தவர் யூதராக மாறும் போது இதன் ஆயத்தப் பணிகளாவன:

ü  கை விரல் நகங்கள், கால் விரல் நகங்கள் வெட்டப்பட வேண்டும்.

ü  தலைமுடியைச் சிரைத்துவிடுவர்.

இவைகளைச் செய்தபின் மூன்று தனிப்பட்ட சடங்குகள் பின்பற்றப்படும்:

ü  ஒன்று      : ஆண்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும்;

ü  இரண்டு    : ஸ்நானம் எடுப்பர்;

ü  மூன்று     : குறிப்பிட்ட (நியமிக்கப்பட்ட) ஒரு பலியை செலுத்த

             வேண்டும்.        

இச்சடங்குகள் நடக்கும் போது மூன்று சாட்சிகள் கூட இருக்கவேண்டும், அதில் ஒருவர் சனகரீம் சங்க உறுப்பினராக இருப்பது மிக அவசியம்.

இப்படியாக ஞானஸ்நானத்தின் வழி யூத மதத்தில் சேர வேண்டும். ஏன் இந்தச் சுத்திகரிப்பின் சடங்கைச் செய்கிறார்கள் என்றால், அடுத்த சமய மக்கள் தீட்டுள்ளவர்கள் என யூதர் கருதினர். புறஜாதியார் ஏற்கனவே அவர்கள் மதத்தின் சுத்திகரிப்பின் சடங்கைச் செய்தவர்களே தற்போது யூதராகும்போது, திரும்பவும் ஞானஸ்நானம் எடுப்பர். இப்படி யூத ஞானஸ்நானம் பெற்றபின் இவன் யூத மதத்தில் ஒரு சிறு குழந்தை என கருதப்படுகிறான். இவன் தன் சகோதரியைக் கூட விவாகம் செய்யலாம் காரணம் யூத கருத்துப்படி, பழைய குடும்ப உறவு முற்றிலும் முறிகிறது. புறஜாதி பெண்கள் யூதச் சமயத்தில் சேரும்போது வெறும் தண்ணீரில் மூழ்கினால் மாத்திரம் போதுமானது.

4. யோவான் ஸ்நாபகன் ஞானஸ்நானம் (John’s Baptism)

கிறிஸ்தவம் உதயமாவதற்கு சற்று முன்னர் கும்ரான் சமூகத்தைச் சார்ந்த துறவிகள் கூட்டம், யோர்தான் நதியோரங்களில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்கள். Shortly prior to Christian era a kind of baptismal movement took place in the Jorden Valley the most notable instance of which was the monastic community at Qumran” இவர்கள் கொடுத்த ஞானஸ்நானம், புதிய பொருளைக் கொடுத்தது. காரணம், வந்த அனைவருக்கும் கொடுக்காது திரும்ப அனுப்பி ஞானஸ்நானத்தில் புது நம்பிக்கையை ஊட்டினர். தங்கள் கும்ரான் சமூகத்தில் இணைந்திருக்க வருடத்திற்கு ஒருமுறையாவது திருமுழுக்கு எடுக்கவேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. புதுப் பொருளைக் கொடுக்கும் இந்தச் சமூகம் கொடுத்த ஞானஸ்நானத்தை எடுக்க யூதரும், யூதரல்லாதோரும். ஆசாரியரும், போர்ச்சேவகர்களும், நீதி செய்யாதவர்களும் வந்தனர். (மத்தேயு: 3:5,6)

இந்த கும்ரான் சமூகத்தின் தலைவர் தான் யோவான் ஸ்நாபகன். இவர் எஸீனியர் சமூகத்தைச் சார்ந்தவர். ஞானஸ்நானத்தை அடிப்படை ஊழியமாக கொண்டவர்கள். இவர்கள் இச்சடங்கின் பொருளற்ற, உயிரற்றதன்மையை உணர்த்தினர். இவர் ஆசாரியர் மற்றும் இறைவாக்கினர் வரிசையில் பிறந்தவர். ஆசாரியர் என்றால் மக்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறவர். இறைவாக்கினர் என்றால் இறைவனின் செய்தியை மக்களிடம் கொண்டு வருபவர். பாலை நிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் என்று இறைவாக்கினர் ஏசாயா முன்னுரைத்தவர் இவரே (ஏசாயா 40:3,5). உயிர்போனாலும், யாருக்கும் பயப்படாமல் உள்ளதை உள்ளபடியே சொன்னார். ஞானஸ்நானம் பாவ மன்னிப்பு அடைந்த பிறகு எடுப்பது அல்ல. மாறாக பாவ மன்னிப்புக்கும், மன மாற்றத்திற்கும் ஞானஸ்நானம் வழிநடத்த வேண்டும். லூக்கா 3:6- அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.

மேலும் லூக்கா 3:16- யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும், நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். இங்கு தண்ணீரால் என்பதைக் கவனியுங்கள். தண்ணீரினுள் அல்லது தண்ணீரில் என்றல்ல, ஆல் என்றசொல் கருத்தேந்தி நிற்கிறது. நிச்சயமாக இது மூழ்கி என்ற பொருள் இல்லை என்பது நமது உண்மை அறிவுக்குப் புலப்படும். மேலும் எனக்குப் பின் வருகிறவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். இங்கு ஆவிக்குரிய பொருளைத்தான் தருகிறது, சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்துவார் என்பதே. இரட்சிப்பு என்பது வார்த்தையினால் அறிக்கையிட்டால் மட்டும் போதாது, செய்கையில் காட்ட வேண்டும் எனக் கூறுகிறார். பாரம்பரிய வாழ்க்கைக்கும், சடங்காச்சாரத்திற்கும் சாட்டையடி கொடுத்து, உண்மை வாழ்விற்கு விடை தருகிறார். ஆகாயத்திலும், ஆரவாரத்திலும் இறைவனைத் தரிசிக்க முடியாது என்பதும் சன்மார்க்க வாழ்வும் அல்ல; வெளித்தோற்றமும் அல்ல; அகவாழ்வு புதுமை அடைவதே மீட்பு என்கிறார்.

5. கிறிஸ்தவ திருமுழுக்கு- (Christian Baptism)

கிறிஸ்தவ ஞானஸ்நானம் என்றால் தந்தை, மைந்தன், தூய ஆவியார் நாமத்தில் ஞானஸ்நானம் எடுப்பது (மத்.28:19).  கிறிஸ்தவ ஞானஸ்நானம் கிறிஸ்துவுக்குப் பின் தொடங்கியது. இது பெந்தெகொஸ்தே விழாவன்று தொடங்கியது அல்லது நடைமுறைக்கு வந்தது எனலாம், இது இயேசுவின் பாடு, மரணம், உயிர்தெழுதலுக்கு அடிப்படையாக அமைகிறது. அப். 2:38- பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அன்றியும், மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும், எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும், வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சியாயிருங்கள் (லூக்கா 24:47,48). லூக்கா சடங்கு அல்ல சாட்சியே (Witness) முக்கியம் என்பதை உலகத்திற்குச் சொல்லுகிறார்.

புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானத்தின் பொருள் கிறிஸ்துவோடு இணைக்கிறது (Union with Christ), கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றோர் அவரோடு இணைகிறார்கள். கலாத்தியர் 3:27-ல் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. ஞானஸ்நானத்தைப் பவுலார் கொலேசேயருக்கு எழுதும்போது, (கொலோ 2:11)  கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தினால் அவருடைய பாடு, மரணம், உயிர்த்தெழுதலில் பங்கு கொள்கிறோம். ஞானஸ்நானக் கொள்கையின் மையமே இயேசு கிறிஸ்துவின் பாடு மரணமாகும். இதன் மூலம் வாக்குத்தத்தத்தின் எல்லைக்குள் வருகிறோம், அவருடைய  உடன்படிக்கை வழி கிறிஸ்துவுக்கும், நமக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. கிறிஸ்தவத்தைத் தழுவும் போது ஞானஸ்நானம்  புதுவாழ்வின் அடையாளமாகிறது. இதனை இரண்டாவது பிறந்தநாள் or மறுபிறப்பு (re-birth) எனலாம். கிறிஸ்தவ ஞானஸ்நானம் கிறிஸ்துவின் உடலோடு (திருச்சபை) இணையும் நிகழ்வு (Incorporation into the body of Christ), இயேசுவின் உடல் என அறிகிறோம். நாம் திருமுழுக்கு எடுக்கும்போது, அவரது சபையில் உறுப்பினர் ஆகிறோம், அதாவது கிறிஸ்துவின் அவயவங்கள் ஆகிறோம். விருத்தசேதனம் இஸ்ரவேல் சமுகத்தில் சேர்வதுபோல் ஞானஸ்நானம் திருச்சபையில் சேருவதற்கான அடையாளமாகும். கொலோ. 2:12- ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். ஞானஸ்நானத்தில் நாம் கிறிஸ்துவோடு இணைந்து, இனி நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் என்பதாகும். நான் அவரோடும் அவர் என்னோடும் என்ற ஒருமைப்பாடு செயல்படத் தொடங்குகிறது. பேதுருவின் இயேசு கிறிஸ்துவை குறித்த பிரசங்கத்தினால் 3000 பேர் மாற்றம் பெற்றனர். மாற்கு 16:15,16- அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசத்திற்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறார். வியாதிப்பட்டோருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் தான் வியாதியிலிருந்து விடுதலை கொடுக்கிறார். இங்கும் விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுகிறான்.

திருமுழுக்கு உணர்த்தும் உண்மைகள்

v  இயேசு பாவி அல்லர் பதிலாள்: இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதேவ ஆட்டுக்குட்டி(யோவான் 1:29).

v  அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு அனேகருடைய பாவங்களை’” தாமே சுமந்தார் (ஏசாயா 53:12).

v  திருமுழுக்கு இயேசு பாவியாகிய என்னை கழுவி மீட்டு கொண்டார் என்ற அனுபவம்.

v  பாவத்துக்கு செத்து நீதிக்குப் பிழைக்கும் அனுபவம்.

v  மனந்திரும்புதலை குறித்த ஞானஸ்நானம் (மாற்:1:4)

v  கடவுள் நீதிபரர் (லூக்:7:29)

v  நல்லகனிகளை கொடுக்க திருமுழுக்கு (லூக்:3:10-14)

v  நீதிமான்கள் ஆக்கப்படுதலின் அடையாளம் (ரோமர் 4:11)

v  மறுபிறப்பிற்கு அடையாளம் (தீத்து 3:5)

v  மனந்திரும்புதலுக்கும் பாவமன்னிப்புக்கும் அடையாளம் (அப் 2:38)

v  கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டு அவரோடு உயிர்த்தெழுலுக்கு அடையாளம் (ரோமர் 6:4. கொலொ 2:12)

v  கிறிஸ்துவின் உடலோடு இணைவதற்கு அடையாளம் (1கொரி 12:12,13)

 

இயேசு ஏன் யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றார்?

திருமறையில் பழைய, புதிய ஏற்பாடுகளில் இந்நதியைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இது யூத எண்ணத்தில் முக்கியமாக இருந்த இந்நதி, இயேசு ஞானஸ்நானம் பெற்றதிலிருந்து கிறிஸ்தவ எண்ணத்தில் இந்நதி அதிக இடம் பெற்றது. இறைவனின் வல்ல செயல்கள் நடந்த இடம் இந்த யோர்தான் ஆகும். குறிப்பாக:

Ø  லோத்து யோர்தான் பகுதியைத் தெரிந்தெடுத்தல் (ஆதி.13:10)

Ø  யோசுவாவும் மக்களும் அருஞ்செயல் வழி நடந்த இடம் (யோசுவா 3:17)

Ø  ஏகூத், மோவாபியரை முறியடித்த இடம் (நியா. 3:28)

Ø  எலிசா அருஞ்செயலாற்றிய நதி, நாகமான் சுகமான (2 இராஜ.5:10)

Ø  யோவான் ஸ்நாபகன் பிரசங்கித்து ஞானஸ்நானம் கொடுக்க வந்த இடம் (மத்.3)

Ø  இயேசு ஞானஸ்நானம் எடுத்த இடம்

இயேசு ஞானஸ்நானம் பெற்றது முதல் இந்நதி அதிக முக்கியத்துவம் பெற்றது.

திருமுழுக்கின் முறை

மூழ்குதலா? தெளித்தலா? என திட்டமான வரையறை திருமறை வகுத்துதரவில்லை. திருமுழுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரிலோ, முறையிலோ அது தனி சிறப்படையவில்லை. அது உணர்த்தும் உண்மையே முக்கியம்.

மூழ்கு ஞானஸ்நானத்திற்கு சான்று

v  இயேசுவின் திருமுழுக்கு (மத் 3:16, மாற் 1:10), எத்தியோப்பிய மந்திரியின் திருமுழுக்கு (அப் 8: 38,39)

தெளித்தல் ஞானஸ்நானத்திற்கு சான்று

v  எண் 19:19, எசேக் 36:25, எபி. 10:22, அப். 2:41, அப் 9:17-18  

குழந்தை திருமுழுக்கு

கி.பி. 3-ம் நூற்றாண்டில் இருந்து குழந்தை திருமுழுக்கு (Infant Baptism) பின்பற்றப்படுகிறது. ஐரேனியஸ் கூறும் பொழுது, கிறிஸ்து குழந்தைகள் முதல் அனைவரையும் மீட்கிறார். மாற் திருமுழுக்கை விட கிறிஸ்து சிறுவர்களை ஆசீர்வதித்த நிகழ்ச்சியே சிறப்பானது. அப்:16:15- லீதியாள் வீட்டார். அப் 16:33,34- சிறைச்சாலைக்காரர், அப் 18:8- கிறிஸ்பு என்பவனின் வீட்டார் எனக்குடும்பாக பெற்ற திருமுழுக்கில் சிறுவர் கண்டிப்பாக அடங்குவர். 

குழந்தைகளுக்கு விசுவாசம் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குழந்தை விசுவாசம் என்பது காலத்தால், அறிவால் கட்டப்பட்டது அல்ல. பழைய ஏற்பாட்டு விடுதலைப் பயணத்தில் பெரியவர்களும், சிறுபிள்ளைகளும் ஞானஸ்நானப்படுத்தப்பட்டனர்(1 கொரி.10:2). இந்த ஞானஸ்நானப்படுத்தல் நிகழ்வில் குழந்தைகள் இல்லை என்று யாராலும் சொல்ல இயலாது. விசுவாசத்திற்கு அடையாளமான விருத்தசேதனத்தை சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து, அதன் விளக்கத்தைப் பெற்றோர் கொடுத்ததுபோல ஞானஸ்நானத்தையும், சிறுவயதில் கொடுத்து, பின் பெற்றோர் விளக்கும்போது, குழந்தைக்கு "சிறுபருவத்திலிருந்தே என்னை கடவுளுடைய வழியிலே நடத்தி வந்தனர்" என்ற உள்ளுணர்வும் புரிந்து கொள்ளுதலும் ஏற்பட்டு, திரும்ப, திரும்ப அர்ப்பணிக்க உதவுகிறது அல்லவா! குழந்தையின் அனுமதியின்றி உடல் நலன்களை நாம் பாதுகாக்கிறோம், குழந்தைகளை மூன்று வயதிலிருந்தே கல்விக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். படிப்படியாக சிறுபிள்ளை கற்றுக் கொள்வதைப் போலத்தான் குழந்தைகளுக்கு ஆன்மீகத்தைப் புகட்டுகிறோம். வெளிப் 20:21- மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்.

ஒரே ஞானஸ்நானம்: 

எபே: 4:5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் ஞானஸ்நானம் திரும்பத் திரும்ப எடுப்பதற்கு அல்ல, திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவதற்கு. மறுதிருமுழுக்கு திருமறைக்கு முற்றிலும் எதிரானது.

*******

ஆ. ஜெனில் தாஸ்


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)