ELOCUTION-INTERMEDIATE தீமைக்கு துணை போகா நட்புறவு (Iசாமுவேல் 18:1)
தீமைக்கு துணை போகா நட்புறவு (Iசாமுவேல் 18:1)
தீமையை
நன்மையினால் வென்ற இறைமகள் இயேசு கிறிஸ்துவின் இனிய நல்
நாமத்தில் செந்தாமரைப் போன்று மலர்ந்த முகத்துடன் வீற்றிருக்கும் நடுவர்களே, என்
போன்ற போட்டியாளர்களே, சான்றோரே பெரியோரே உங்கள் அனைவருக்கும் என் அன்பின்
நல்வாழ்த்துக்கள். எனக்கு
பேசும்படியாக தரப்பட்டுள்ள தலைப்பு “தீமைக்கு துணை போகா நட்புறவு”
என்பதாகும் இதற்கு ஆதாரமான திருமறை பகுதி Iசாமுவேல் 18-ஆம் அதிகாரம் 1-ஆம் திருவசனம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு என்
சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
நிலையில்லா
உலகமதில் நிலையான நட்புறவை தேடியோடும் மனிதர்களில் உண்மை
நட்புறவுக்கு அடையாளமாக பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் தாவீதும்
யோனத்தானும். இவர்கள் நட்புறவு தீமைக்கு துணை போகா நட்புறவு என்றே சொல்ல
வேண்டும். அது
மட்டுமல்ல இது தீமையை நன்மையினால் வென்ற நட்புறவும் கூட. இதை தான் 1சாமுவேல் 18:1-இல் யோனத்தானுடைய
ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன்
உயிரைப்போலச் சிநேகித்தான் என வாசிக்கிறோம். தாவீது யோனத்தான் நட்பு “முன் பால் போன்று திரைந்து, பின்
உரையும் தயிர் போன்ற” நட்பு என்றால் அது மிகையன்று.
உலக இயல்புபடி
மனிதனில் மிக மேலோங்கிய பகை ஜென்மபகை என்பர். இது காலாகாலமாக, தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படும் தீய
பகை. தன் தகப்பன் பகைத்த ஒரு சாதாரண
மனிதனை அதுவும் சாதாரண ஆட்டு மேய்ப்பனை ஒரு இளவரசனால் அன்பு கொள்ள கூடுமோ? அதேசமயம் தன்னை வேட்டையாட துடித்த அரசனின்
மகனிடம் பாசம் காட்டிட எண்ணம் தான் விரையுமோ? என சிந்திக்கும் போது தான் நட்பு என்பது “முட்கள் மத்தியில்
மலர்ந்து, நாட்கள் முழுவதும் வாசம் வீசும் ரோஜா” என்பதை தாவீது-யோனத்தானின் நட்புறவு
மூலம் கண்டேன் நானும்.
இவ்வுலகில்
காணப்படும் பாசங்களில் விலைமதிப்பற்றது ‘தாய் பாசம்’ மட்டும் தான் என்று
சொல்வதுண்டு. இந்த உயர்ந்த பாசத்தை காட்டிலும்
தங்களின் நட்பு சிறந்தது என்பதை 2சாமுவேல் 1:26-இல் என்
சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு
இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின்
சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது என தாவீது குறிப்பிடுவதின் மூலம் இவர்கள்
நல்லுறவை புரிந்து கொள்ள முடிகிறது. தாவீதுடனான
நட்புறவால் யோனத்தானுக்கு என்ன பயன்?
என்று சிந்திப்போமாகில், எந்த பயனும் இருந்ததாக தோன்றவில்லை. இப்படிப்பட்ட எவ்வித எதிர்பார்ப்பும்
இல்லா நட்புறவே தீமைக்குத் துணை போகா நட்பு உறவாய் அமைய முடியும்.
ஆனால்
தற்கால உலகில் வாழ்ந்து வரும் மனிதர்களிடையே இத்தகைய நட்புறவை காண்பது அறிது. நாம்
எதிர்கொள்ளும் உறவுகளில் பெரும்பாலும் மாயமாலமான நட்புறவே காணப்படுகின்றன. தற்கால சமூகத்தில் துரோகத்தால் வீழ்ந்த
மனிதர்களை தான் நாம் அதிகம் அறிந்து கொள்கிறோம். நட்பாய் பழகும் பலர் தங்கள் நட்புக்கு இன்பம் சேர்ப்பதில்லை,
அந்த நல்லுறவுக்கு உண்மையாகவும் இருப்பதில்லை. ஏதோ ஒரு வகையிலான எதிர்பார்ப்புகளை கொண்ட நட்பையே தற்கால
மனிதர்களில் காண முடிகிறது.
ஆனால் திருமறை
கூறும் தாவீது-யோனத்தான் நட்புறவு இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது. யோனத்தான்
இளவரசனாய் இருந்தபோதிலும், தாவீது அந்த நட்பை தன் சுயலாபத்திற்கு என்று
பயன்படுத்தவில்லை.
அதேசமயம் யோனத்தானும்
தாவீது சாதாரண ஆட்டு மேய்ப்பன் என அசட்டை பண்ணவும் இல்லை. இருவரும் தங்கள் நட்புக்கு உண்மையாய் இருந்தார்கள்.
சோதனைகளும், சவால்களும் வந்த போதிலும் அதை இணைந்தே எதிர்கொண்டார்கள். இவர்கள் நட்பு தீமையை வென்று காட்டிய
நட்புறவு. எனவே நாமும் தாவீது யோனத்தான் நட்பை மாதிரியாக கொண்டு, இவ்வுலகில்
நமக்கு இருக்கும் நல்லுறவுகளில் உண்மையாய் இருப்போம். உண்மையே உருவான இயேசு
கிறிஸ்துவுக்கு சான்றார்களாகுவோம் எனக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். ஆமென்.
A. JENIL DHAS
Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊
Comments
Post a Comment