ELOCUTION-JUNIOR ஒப்புரவில் வெளிப்பட்ட நட்புறவு (ஆதியாகமம் 33:10)

 ஒப்புரவில் வெளிப்பட்ட நட்புறவு (ஆதியாகமம் 33:10)

வானாதி வானங்களுக்கு மேலாக தம்முடைய பரமசிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவாதி தேவனை போற்றி, நடுநிலை தவறாது நியாயம் வழங்க வீற்றிருக்கும் நடுவர்களை வாழ்த்தி, என் போன்ற பேச்சாளர்களுக்கும், அவையோருக்கும், சபையோருக்கும் வணக்கம் சொல்லி,

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என்ற வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப ஏசா-யாக்கோபு சகோதரத்துவத்தை “ஒப்புரவில் வெளிப்பட்ட நட்புறவு” என்னும் தலைப்பில் ஆதியாகமம் 33:10-யை ஆதாரமாக கொண்டு என் சிந்தையில் எழுந்த கருத்துக்களை திருமறை வெளிச்சத்தில் எடுத்துரைக்கிறேன்.

முற்பிதாக்களில் ஒருவரான ஈசாக்கின் இரட்டைப் பிள்ளைகள் தான் ஏசாவும், யாக்கோபும். இவர்கள் பிறப்பால் ஒன்றுபட்டாலும் குணத்தால் வேறுப்பட்டே காணப்பட்ட சகோதரர்கள். ஈசா தன் தகப்பனுக்கு பிரியமான மகன், அதேசமயம் ரெபேக்காளோ யாக்கோபின் மேல் பட்சமாய் இருந்தாள். பெற்றோரின் பாசத்தில் கூட பாரபட்சம் காணப்பட்டது. ஏசாவோ ஒருவாய் கூழுக்காக தன் சேஷ்டபுத்திர சுதந்திரத்தை, அதாவது தலைப்பிள்ளைகான உரிமையை தன் சகோதரனான யாக்கோபுக்கு விற்று போட்டான். அதுமட்டுமல்லாது யாக்கோபு தன் தாயின் துணையோடு தன் தகப்பன் ஈசாக்கின் ஆசீர்வாதத்தையும் தந்திரமாய் திருடிக் கொண்டான். நியாயப்படி இது மூத்தவன் ஏசாவிற்கு சேர வேண்டிய தகப்பனின் ஆசிர்வாதம். தான் வஞ்சிக்கப்பட்டதை அறிந்த ஏசா கோபமாகி, தன் சகோதரன் யாக்கோபை பழிவாங்க தீர்மானித்தார். இதனால் தன் உயிரை காத்துக்கொள்ள தன் தாய்மாமன் லாபானின் வீட்டில் தஞ்சம் அடைந்தார் யாக்கோபு. “முற்பகல் விதைப்பின் பிற்பகல் விளையும்” என்னும் முதுமொழிக்கு ஏற்ப எத்தன் யாக்கோபு தன் மாமன் வீட்டில் ஏமாற்றப்பட்டார். சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கானான் திரும்பும் யாக்கோபு, ஏசாவை கண்டு அஞ்சுகிறார். ஆனாலும் நீதிமொழிகள் 17:17-இல் சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான் என்கிற திருமறைக் கூற்றுக்கு ஏற்ப ஆதியாகமம் 33:4-இல் ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள் என்பதின் மூலம் ஒப்புரவில் வெளிப்பட்ட நட்புறவை நம்மால் காண முடிகிறது.

நீதிமொழிகள் 18:19-இல் அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப் பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது, என்கிற திருவசனத்தின்படி தன் சகோதரனை வசப்படுத்தும் பல பொருட்களை ஏசாவிற்கு அனுப்புகிறார் யாக்கோபு. இருப்பினும் ஏசாவோ, என் சகோதரனே எனக்கு போதுமானது உண்டு உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்று சொல்லி கடவுளின் திட்டமான மன்னிப்பை தன் சகோதரனுக்கு வழங்குகிறார். எனவேதான் யாக்கோபு நான் உன்னுடைய முகத்தை கண்டது தேவனுடைய முகத்தை கண்டது போல் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆம், இங்கே மன்னிக்கும் மனிதர் தெய்வமாகிறார்.

இன்றைய வாழ்வில் தன் சொந்த சகோதரர் செய்யும் குற்றங்களை மன்னிக்க மனதில்லாமல், சகோதரனை பகைத்து குடும்ப வாழ்வை இழந்து, எல்லாம் இருந்தும் அனாதைகள் போன்ற வாழ்வு வாழும் மனிதர்கள் பலர். இத்தகையோருக்கு ஏசா-யாக்கோபின் ஒப்புரவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மன்னிக்கும் குணம் வெளிப்படுகிற போது தான் உறவு வலு பெறுகிறது. பல நிலைகளில் நாமும் கூட பிறர் குற்றங்களை மன்னிக்க தவறி பல நல்லுறவுகளை இழந்து போனோம். பிறருக்கு அளக்கிற அளவின்படியே நமக்கும் அளக்கப்படும் என்பதை உணர்ந்து, ஒப்புரவால் நட்புறவை வெளிப்படுத்துவோம். கிறிஸ்து அருளிய மன்னிப்பை நாமும் தாராளமாய் வழங்குவோம் எனக் கூறி என் உரைக்கு திரையிடுகிறேன். ஆமென்.

A. JENIL DHAS


Thank you for visiting JD Scribble. Feel free to give your comments. Don't forget to follow my blog. 😊

 

Comments

Popular posts from this blog

பள்ளி ஆண்டுவிழா வாழ்த்துரை - SCHOOL ANNUAL DAY SPEECH - FAREWELL SPEECH

ELOCUTION-INFANT பகை மறந்து பாசம் காட்டும் யோசேப்பு (ஆதியாகமம் 45: 5) CSI KANYAKUMARI DIOCESE TOPIC 2023

ELOCUTION- BEGINNER எறும்பு கற்பிக்கும் ஞானம் (நீதிமொழிகள் 6:6)